சென்னை: ஓய்வூதியதாரர்களின் குறைகளை விரைந்து களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிதித்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில், நிதித்துறையின் செயல்பாடுகள், துறை மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு பணிகளின் முன்னேற்றம், புதிதாக திட்டமிட்டுள்ள மாற்றங்கள் மற்றும் உத்தேசிக்கப்பட்டுள்ள மாற்றங்கள் ஆகியவை குறித்து குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமை செயலாளர் இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் கிருஷ்ணன், கருவூல கணக்கு துறை ஆணையர் வெங்கடேஷ், நிதித்துறை சிறப்பு செயலாளர் ரீட்டா ஹரீஷ் தாக்கர், நிதித்துறை கூடுதல் செயலாளர் பிரசாந்த் எம்.வடநேரே மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இணையதளம் வாயிலாக நன்கொடைகள் பெறும் வசதியின்படி, 8.05.2021 முதல் 28.07.2021 வரை ரூ.500 கோடிக்கும் அதிகமாக நன்கொடை பெறப்பட்டு, ரூ.305 கோடிக்கு கொரோனா தொற்று தொடர்பான பணிகளுக்கு செலவிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தின் செயல்பாட்டு நிலை, பயன்பெற்று வரும் பயனாளிகளின் விவரங்கள், சார்நிலை கருவூலங்களின் செயல்பாடுகள், அரசு பணியாளர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் செயல்பாடுகளை சிறப்பான முறையில் நிறைவேற்ற வேண்டும். தணிக்கை முறைகளை வலுப்படுத்தி, தணிக்கை தடைகள் எழாத வண்ணம், சிறந்த நிர்வாகத்தை ஏற்படுத்திட வேண்டும்.
நிலுவையில் உள்ள தணிக்கை பத்திகளின் தற்போதைய நிலையினை கண்காணித்திட வேண்டும். அரசின் வரவு - செலவு திட்ட நடவடிக்கைகளில் மற்றும் வரவு - செலவு திட்டம் தயாரிப்பதில் நவீன வழிமுறைகளை கையாளுதல், எளிய மற்றும் பேச்சு வழக்கு மொழியில் குடிமக்களுக்கான வரவு-செலவு திட்டத்தை வெளியிடுதல் போன்ற புதிய சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதுடன், ஓய்வூதியதாரர்களின் குறைகளை விரைந்து களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். மேலும், தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தின் மூலம் நிர்வகிக்கப்படும், திட்ட தயாரிப்பு நிதியின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்தும் முதல்வர் கேட்டறிந்தார்.