மும்பை: எல்கார் பரிஷத் வழக்கில் தொடர்புடைய இறந்த சமூக செயற்பாட்டாளர் ஸ்டான் சுவாமியின் மருத்துவ அறிக்கை மும்பை உயர்நீதிமன்றத்தில் மகாராஷ்டிரா அரசு தாக்கல் செய்தது. புனேயில் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி நடைபெற்ற மாநாட்டில் சமூக செயற்பாட்டாளர் ஸ்டான் ஸ்வாமி பேசிய பேச்சு காரணமாக கோரேகான் பீமா போர் நினைவிடத்தில் மறுநாள் வன்முறை வெடித்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதில் மாவோயிஸ்ட்டுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டதை தொடர்ந்து எல்கார் பரிஷத் அமைப்புடன் தொடர்புடைய ஸ்டான் சுவாமி தேசிய புலனாய்வு அமைப்பால் கடந்த 2020ம் ஆண்டு அக்டோபரில் கைது செய்யப்பட்டார். நவிமும்பையில் உள்ள தலோஜா சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டிருந்த அவருக்கு பர்கின்சன் நோய் பாதிப்பு இருந்தது. இந்நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்டான் சுவாமி கடந்த 5ம் தேதி சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
இதுதொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் பழங்குடியினர் உரிமை ஆர்வலர் அமைப்பு சார்பில் ஆஜரான வக்கீல் மிகிர் தேசாய், ‘மகாராஷ்டிரா சிறை நிர்வாகம் மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பு ஆகியவற்றின் அலட்சியம் காரணமாக சரியான நேரத்தில் மருத்துவ உதவி வழங்கப்படாததால் ஸ்டான் சுவாமி இறந்தார். எனவே சுவாமியின் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்’ என்று வாதிட்டார். அவரது கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் ஸ்டான் சுவாமியின் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டார். இதையேற்று, நேற்று அரசு தலைமை வழக்கறிஞர் அருணா பாய் 300 பக்கம் கொண்ட மருத்துவ சிகிச்சை அறிக்கையை நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஷின்டே மற்றும் ஜமாதார் அமர்வில் தாக்கல் செய்தார். இதில் அவர் தலோஜா சிறைக்கு வந்தது முதல் பிரேத பரிசோதனை அறிக்கை வரை என்ன நடந்தது என்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.