புதுடெல்லி: வங்கக்கடலில் உருவாகியுள்ள யாஸ் புயலை சமாளிக்க எடுக்க வேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். அரபிக் கடலில் உருவான டவ்தே புயல் கடந்த வாரம் குஜராத்தை புரட்டிப் போட்டது. தற்போது அந்தமான் அருகே வங்கக் கடலில் யாஸ் புயல் உருவாகியுள்ளது. ‘மேற்கு வங்கம் மற்றும் வடக்கு ஒடிசாவை 26-ம் தேதி மாலையில் யாஷ் புயல் கடக்கும். 185 கிமீ வேகத்தில் வீசும் புயலால் அசாம், மேகாலாயாவிலும் தீவிர மழைக்கு வாய்ப்பு உண்டு’ என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி நேற்று காணொலி வழியே ஆலோசனை நடத்தினார். உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட அமைச்சர்கள், உயர்மட்ட அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.
‘புயல் கரையைக் கடக்கும் மாநிலங்களுடன் அதிகாரிகள் தொடர்பில் இருக்க வேண்டும். கரையோர பகுதிகளில் இருக்கும் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட வேண்டும். துண்டிக்கப்படும் மின்சாரம், தொலைபேசி இணைப்புகள் விரைந்து சரி செய்யப்பட வேண்டும்’ என்று பிரதமர் இந்த கூட்டத்தில் அறிவுறுத்தினார்.
விளைவுகள் மோசமாக இருக்கும்
‘யாஸ் புயலால் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா கடுமையாக பாதிக்கப்படக் கூடும். எனவே, மாவட்ட ஆட்சியர்கள் பொதுமக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைப்பது அவசியம்’ என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது.