சென்னை: கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, எல்ஐசி நிறுவனம் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே இயங்கும் என அறிவித்துள்ளது. இதுபோல், செட்டில்மென்ட் தொடர்பாகவும் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, செட்டில் மென்ட்கள் தொடர்பாக சில தளர்வுகள் அறிவிக்கப்படுகிறது. பாலிசிதாரர்களின் இறப்பு பலன்களை கோருவதற்கு பொதுவாக மாநகராட்சி சான்றிதழை சமர்ப்பிப்பது வழக்கம். இந்நிலையில் கீழ்க்காணும் மாற்று சான்றுகளும் சமர்ப்பிக்கலாம். இறப்பு சான்று, மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ஜ் அல்லது இறப்பு தொடர்பாக, அரசு, இஎஸ்ஐ, முப்படை, மருத்துவமனை ஆகியவற்றால் தேதி மற்றும் நேரம் குறிப்பிட்டு வழங்கப்பட்ட சான்று, எல்ஐசி கிளாஸ் 1 அதிகாரி அல்லது 10 ஆண்டு பணியில் இருந்த டெலவப்மென்ட் அதிகாரிகள் ஒப்பத்துடன் இருக்க வேண்டும். அத்துடன், மயானம் அல்லது கல்லறை சான்று அல்லது இதற்கு இணையானதாக வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ சான்றுகள் சமர்ப்பிக்கலாம்.
இதுபோல், மணிபேக் போன்ற பாலிசிக்களில் 31.10.2021 வரை உயிர்ச்சான்று சமர்ப்பிக்க தேவையில்லை. பிறர் இமெயில் மூலம் சான்று அனுப்பலாம். இதுபோல், உயிர்ச்சான்று வழங்குவதற்கு வீடியோ அழைப்பு மூலம் மேற்கொள்ளும் நடைமுறையை எல்ஐசி அறிமுகம் செய்துள்ளது. இதுபோல், பாலிசி முதிர்வு உள்ளிட்ட பலன்களுக்கு செட்டில்மென்ட்களுக்கு பாலிசிதாரர்கள் அருகிலுள்ள எல்ஐசி கிளை அலுவலகத்திலும் சான்றுகளை சமர்ப்பிக்கலாம். அனைத்து எல்ஐசி அலுவலகங்களும், வரும் 10ம் தேதி முதல் ஏப்ரல் 15ம் தேதி வரை திங்கள் முதல் வெள்ளி வரை வாரத்தில் 5 நாட்கள் மட்டும் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை இயங்கும். சனிக்கிழமை செயல்படாது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.