×

சொந்த மாவட்டத்திலேயே கேங்மேன் ஊழியர்களுக்கு வேலை வழங்க வேண்டும்: மின்வாரிய தொழிற்சங்கம் கோரிக்கை

சென்னை: .தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் சார்பில், மின்வாரிய இயக்குனருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் 10,000 கேங்மேன் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அதிகபட்சம் வெளிமாவட்டங்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அங்கு அவர்கள் பணியேற்பு செய்துள்ளனர். திட்ட அளவிலான (மாவட்டத்திற்குள்) முதன்மை பட்டியலை கொண்டுள்ள களப்பணி பிரிவினரில், ஒரு புதிய பதவியாக கேங்மேன் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் மாவட்டம் விட்டு மாவட்டத்தில் பணியமர்த்தியுள்ளது பணியாளர்களுக்கு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது. குறைந்த வருமானத்தில் வெளிமாவட்டத்தில் தனியாக வசித்து வேலைக்கு செல்வதும், சொந்த மாவட்டத்தில் உள்ள ஊரில் குடும்பம் தனித்து வாழ்வதும் மிகப்பெரிய பொருளாதார சிக்கலை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. எனவே வெளிமாவட்டங்களில் பணியமர்த்தியுள்ள கேங்மேன் பணியாளர்களை விரைவாக அவரவர் சொந்த மாவட்டங்களில் பணியமர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Tags : Gangman , Gangman employees must be employed in their own district: Electrical union demand
× RELATED நங்கநல்லூர், கொரட்டூரில் மின்சாரம் பாய்ந்ததில் கேங்மேன், வக்கீல் பலி