சென்னை: தங்கம் விலை சவரனுக்கு 608 அதிகரித்தது. தங்கம் விலை கடந்த சில மாதமாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. மார்ச் 1ம் தேதி ஒரு சவரன் 34,736க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு தங்கம் விலை தொடர்ந்து ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வந்தது. கடந்த 30ம் தேதி சவரனுக்கு 248 குறைந்து, ஒரு சவரன் 33,616க்கு விற்கப்பட்டது. 2வது நாளாக நேற்று முன்தினம் தங்கம் விலை மேலும் குறைந்தது. கிராமுக்கு 40 குறைந்து ஒரு கிராம் 4,162க்கும், சவரனுக்கு 320 குறைந்து ஒரு சவரன் 33,296க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை குறைந்து வந்தது நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வந்தது. இந்த விலை குறைவு இரண்டு நாட்கள் கூட நீடிக்கவில்லை.
நேற்று காலையில் தங்கம் விலை அதிரடியாக உயர்வை சந்தித்தது. கிராமுக்கு 64 அதிகரித்து ஒரு கிராம் 4,226க்கும், சவரனுக்கு 512 அதிகரித்து ஒரு சவரன் 33,808க்கும் விற்கப்பட்டது. மாலையில் தங்கம் விலை மேலும் அதிகரித்தது.
அதாவது, நேற்று முன்தினம் விலையை கிராமுக்கு 76 அதிகரித்து ஒரு கிராம் 4,238க்கும், சவரனுக்கு 608 அதிகரித்து ஒரு சவரன் 33,904க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை உயர்வு நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதே நேரத்தில் தங்கம் விலை மீண்டும் 34 ஆயிரத்தை தொட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.