கோவை : கிணத்துக்கடவு தொகுதி தி.மு.க. வேட்பாளராக குறிச்சி பிரபாகரன் போட்டியிடுகிறார். இந்நிலையில், நேற்று அவர் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். மதுக்கரை மேற்கு ஒன்றிய பகுதிகளான குமாரபாளையம், லட்சுமி நகர், வடபுதூர் உள்ளிட்ட 26 பகுதிகளில் மக்களிடம் சென்று பிரசாரம் மேற்கொண்டார்.
மேலும், அப்பகுதியில் உள்ள பிரச்சினைகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார். பிரச்சாரத்தின் போது, கிணத்துக்கடவு மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக தெரிவித்தார். மேலும், அவர் பேசுகையில்,`இரண்டு முறை குறிச்சி நகர் மன்ற தலைவராக இருந்துள்ளேன். மக்கள் என்னை எளிதில் அணுக முடியும். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவது உறுதி’ என்றார்.
இந்நிகழ்வுகளின் போது கோவை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி, அவைத்தலைவர் அக்ஷயா நாகராஜ், பகுதி கழக பொறுப்பாளர்கள் கார்த்திகேயன், எஸ்.ஏ.காதர், ஒன்றிய செயலாளர் ஈ.பி.ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகராஜ சோழன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.