புதுடெல்லி: பத்திரிகையாளர் பிரியா ரமணி கொடுத்த மீ டூ புகார் மீது அவதூறு வழக்கு தொடர்ந்த எம்ஜே அக்பர் மனு மீதான தீர்ப்பு பிப்ரவரி 17ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. மத்திய அமைச்சராக இருந்த எம்ஜே அக்பர் மீது பிரியா ரமணி என்கிற பத்திரிகையாளர் மீ டூ புகார் கொடுத்தார். இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததால் 2018 அக்டோபர் 17ல் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து அக்பர் விலகினார். மேலும் தன் மீது அவதூறு புகார் தெரிவித்ததாக கூறி பிரியா ரமணி மீது போலீசில் புகார் கொடுத்தார். மேலும் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கும் தொடர்ந்தார். இந்த மனு மீதான விசாரணை கூடுதல் மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் ரவீந்திரகுமார் பாண்டே முன்னிலையில் நடந்தது.
இருதரப்பிலும் வாதம் பிப்ரவரி 1ம் தேதி முடிந்தது. அதை தொடர்ந்து எழுத்துப்பூர்வ பதில் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பு பிப்ரவரி 10ம் தேதி வெளியாகும் என்று தெரிவித்தார். நேற்று தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் மீண்டும் பிப்ரவரி 17ம் தேதிக்கு தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி நீதிபதி கூறுகையில்,’ இருதரப்பினரும் எழுத்துப்பூர்வ அறிக்கையை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டதால் வழக்கின் தீர்ப்பு பிப்ரவரி 17ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது’ என்றார்.