புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் ஏனாம் தொகுதி எம்எல்ஏவாக 5 முறை தொடர்ந்து வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மல்லாடி கிருஷ்ணாராவ், தான் பொறுப்பு வகித்து வந்த சுகாதாரத்துறை அமைச்சர் பதவியை கடந்த சில நாட்களுக்கு முன் ராஜினாமா செய்தார். முன்னதாக 25 ஆண்டுகாலம் மல்லாடியின் மக்கள் பணியை பாராட்டி சட்டசபை செயலகம் சார்பில் ஏனாமில் பராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய மல்லாடி, வரும் தேர்தலில் போட்டியிட போவதில்லை, எனது குடும்பத்தை சேர்ந்தவர்களும் அரசியலுக்கு வர மாட்டார்கள். திருப்பதி தேவஸ்தான தலைவர் பதவிக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அழைப்பதாக தெரிவித்தார்.
மல்லாடியின் இந்த முடிவு, அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதற்கிடையே நேற்று ஏனாம் அய்யனன் நகரில் மரம் நடும் விழாவில் கலந்து கொண்ட மல்லாடியை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு, அரசியலை விட்டு விலகக்கூடாது, வரும் தேர்தலிலும் நீங்களே எம்எல்ஏவாக போட்டியிட வேண்டுமென வலியுறுத்தினர். நீங்கள் தான் நிற்க வேண்டும் என்று மக்கள் எல்லோரும் சேர்ந்து அழுதபடியே கோரிக்கை வைத்ததால், அங்கிருந்த மல்லாடியும் உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்டு அழுதார். கைக்குட்டையால் கண்ணீரை துடைத்தபடியே இருந்தார். தொடர்ந்து அங்குள்ள அக்னி குல ஷத்திரியா திருமண மண்டபத்தில் ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
மக்களுக்காக முடிவை மாற்றிக்கொண்டு மல்லாடி தேர்தலில் போட்டியிட வேண்டுமென வலியுறுத்தினர். அப்போது பேசிய மல்லாடி, நான் எனது முடிவில் உறுதியாக இருக்கிறேன். ஒரு நாளைக்கு மூன்றரை மணி நேரம் தான் தூங்குகிறேன். எனக்கு ஓய்வு தேவைப்படுகிறது. என்னை புரிந்து கொண்டு நம்மில் இருந்து ஒருவரை தேர்வு செய்து புதுச்சேரி சட்டசபைக்கு அனுப்ப வேண்டும். யார்? அவர் என்பதை நீங்களே சொல்ல வேண்டும். ஏனாம் வளர்ச்சிக்கு யார்? உறுதுணையாக இருப்பார் என்பதை அறிந்து சொல்லுங்கள். நான் இங்கே தான் இருப்பேன். எங்கும் செல்லப்போவதில்லை என்றார்.