நத்தம்: இயேசு நாதரை சுட்ட கோட்சே வாரிசை பேசுவது போல தமிழக அரசை குற்றம் சாட்டி வருகின்றனர் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே முளையூரில் நேற்று முன்தினம் இரவு மினி கிளினிக் திறப்பு விழா நடந்தது. அதனை திறந்து வைத்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது: அரசு சார்பில் பொங்கலுக்காக ரூ.2,500 பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இயேசு நாதரை சுட்ட கோட்சே வாரிசை பேசுவது போல தமிழக அரசை பேசி வருகின்றனர். கொரோனா காலத்திலும் மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை முதல்வர் கேட்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சரின் பேச்சை கேட்ட அதிமுகவினர், அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கனவே, ‘மருத்துவமனையில் ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார். சட்னி சாப்பிட்டார் என்பதெல்லாம் பொய்’ என கூறி அதிமுக மற்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். பாரத ரத்னா எம்ஜிஆர் என்பதற்கு பதிலாக பாரத பிரமதர், மன்மோகன்சிங், நரசிம்மராவை பாரத பிரதமர் என பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும், ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை டிடிவி.தினகரன் மூலம் 18 எம்எல்ஏக்களும் பெற்றுக் கொண்டு மக்களை ஏமாற்றுகின்றனர் என்று மிரள வைத்தார். அண்மையில் நீலகிரியில் பழங்குடியின சிறுவனை அழைத்து செருப்பை கழற்றச் சொன்னது என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் சர்ச்சைக்குரிய பேச்சு, செயல்கள் தொடர்ந்தவண்ணம் உள்ளன. தற்போது காந்தியை சுட்ட கோட்சே என்பதற்கு பதிலாக, இயேசு நாதரை சுட்ட கோட்சே என கூறியிருப்பது மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.