×

மதுரைத் தொகுதிக்கு கிட்டிய தீபாவளி பரிசு.. கருங்காலக்குடி மேம்பாலம் கட்ட ரூ 19 கோடி ஒதுக்கி உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கடிதம்! : சு.வெங்கடேசன் எம் பி தகவல்

சென்னை : கருங்காலக்குடி பகுதியில் தொடர்ச்சியாக ஏற்படும் சாலை விபத்துகளை தடுப்பதற்காக  பாலம் அமைக்கப்படும் என்றும் அதற்காக ரூ.19 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் நிதின் கட்கரி தனக்கு கடிதம் எழுதியுள்ளதாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மதுரை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கருங்காலக்குடி பகுதியில் தொடர்ச்சியாக ஏற்படும் சாலை விபத்துகளை தடுப்பதற்காக  பாலம் அமைக்கப்படும் என்றும் அதற்காக ரூ.19 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் நிதின் கட்கரி எனக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இது கருங்காலக்குடி - மேலூர் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. எங்களின் தேர்தல் வாக்குறுதியும் கூட. அவ்வாக்குறுதி விரைவில் நிறைவேறும் வகையில் ரூ.19 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணி விரைவில் துவங்கும் என்கிற மகிழ்வான செய்தி மத்திய அமைச்சர் திரு.நிதின் கட்கரி அவர்களின் கடிதத்தில் பகிரப்பட்டுள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தின் பொழுதே அப்பகுதி மக்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டது. வெற்றி பெற்ற பிறகு என் தரப்பில் இப்பிரச்சினையில் கூடுதல் அக்கறை செலுத்தப்பட்டு தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கடிதம் வாயிலாகவும் நேரிலும் அமைச்சரின் கவனத்துக்குஇக்கோரிக்கையை கொண்டுசென்றேன். அதன் விளைவாக கடந்த ஜனவரி மாதம் ஆய்வு மேற்கொண்டு  தொடர் விபத்து நடக்கும் பகுதி என்பதையும் தவிர்ப்பதற்கான ஏற்பாடு தேவை என்பதையும்  தேசிய நெடுஞ்சாலை துறையினர் ஏற்றுக் கொள்ளுமாறு முயற்சி மேற்கொண்டு வெற்றி கிட்டியது.

பிறகு பாலம் கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யுமாறு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. கோவிட் பெருந்தொற்றுக்காக அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்திற்கு முன்பாக கடந்த மார்ச் மாதம் 9ம் தேதி கருங்காலக்குடி பாலம் தொடர்பாக நிதி ஒதுக்கீடு செய்ய  மத்திய அமைச்சருக்கு மீண்டும் கடிதம் எழுதி, நேரிலும் வலியுறுத்தினேன்.நவம்பர் 6ம் தேதி அதற்கு பதில் அனுப்பியுள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அவர்கள் கருங்காலக்குடியில் சாலை விபத்தினை தவிர்க்க வாகனங்கள் செல்ல சுரங்கப்பாதை அமைக்கப்படும் என்றும் இதற்கு ரூ.19 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகை காலத்தில் பெறப்பட்ட இத்தகவல் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் உள்ள மேலூர் தொகுதி மக்களுக்கான பரிசு மட்டுமல்ல; மதுரை - திருச்சி நெடுஞ்சாலையில் பயணிக்கும் அனைவருக்கும் கிட்டிய பரிசு எனக் கருதி இம்மகிழ்ச்சியான செய்தியினை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்,

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Nitin Gadkari ,Karungalakkudi , Madurai constituency, Deepavali gift, Karungalakudi, flyover, Minister Nitin Gadkari, letter, S. Venkatesh MP, Information
× RELATED தேர்தல் பிரசாரத்தில் மயங்கி விழுந்தார் நிதின் கட்கரி