×

தமிழகம் முழுவதும் கல்வி நிறுவனங்களில் வர்த்தக கண்காட்சி நடத்துவதை எதிர்த்து வழக்கு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை

சென்னை: கல்வி நிறுவனங்களில் வர்த்தக கண்காட்சிகள் நடத்த அனுமதி வழங்கக் கூடாது என்று தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், கல்வி நிறுவனங்களில் கல்வி சாராத கூட்டங்கள், நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் நடத்தக் கூடாது எனவும், கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் மட்டுமே நடத்த வேண்டும் எனவும் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், திருச்சி மற்றும் வேலூரில் உள்ள தனியார் பள்ளிகளில் கண்காட்சி நடத்தப்பட்டதாகக் கூறி, திருப்பூரைச் சேர்ந்த பரத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், இந்த கண்காட்சிகளால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற உத்தரவையும், அரசு உத்தரவையும் இந்த கல்வி நிறுவனங்கள் பின்பற்றவில்லை. இது சம்பந்தமாக அளித்த மனுவை அரசு பரிசீலிக்கவில்லை. கல்வி நிறுவன வளாகங்களில் வணிக ரீதியிலான கண்காட்சிகளை நடத்த அனுமதி வழங்கக் கூடாது என்று அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post தமிழகம் முழுவதும் கல்வி நிறுவனங்களில் வர்த்தக கண்காட்சி நடத்துவதை எதிர்த்து வழக்கு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,ICourt ,Chennai ,Chennai High Court ,Tamil Nadu government ,Madras High Court ,
× RELATED சென்னையில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை...