சென்னை: வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் டெல்டா மற்றும் 8 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைய தொடங்கியுள்ள நிலையில் இலங்கை அருகே நிலைகொண்டுள்ள வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக, நேற்று கோத்தகிரியில் 120 மிமீ மழை பெய்துள்ளது. கேத்தி 100 மிமீ, சாமராஜ் எஸ்டேட் 90 மிமீ குன்னூர், திருச்சுழி, பரமக்குடி 70 மிமீ, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராசிபுரம் 60 மிமீ மழை பெய்துள்ளது.
இந்நிலையில், இலங்கை அருகே மன்னார் வளைகுடா வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்யும். குறிப்பாக திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும். இதுதவிர டெல்டா மாவட்டங்கள், காரைக்கால், கடலூர் மற்றும் நீலகிரி, தேனி மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். மேலும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்.
அத்துடன், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யும். சில இடங்களில் இடியுடன் மழை பெய்யும். நள்ளிரவு நேரங்களில் சில இடங்–்களில் இடியுடன் மழை பெய்யும்.