சென்னை: ஹத்ராஸ் பலாத்கார சம்பவத்தை கண்டித்தும், ராகுல்காந்தி தாக்கப்பட்டதை கண்டித்தும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் வரும் 10ம்தேதி அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதுகுறித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் முஹம்மது அபூபக்கர் எம்எல்ஏ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: உ.பி. மாநிலம் ஹத்ராஸில் இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், இச்சம்பவத்திற்கு நீதி கேட்க சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரை உ.பி. அரசு காவல்துறையினர் தாக்கியதை கண்டித்தும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் வரும் 10ம்தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும். மத்திய பாஜ ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மக்களுக்கு தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. நாடாளுமன்ற, சட்டமன்றங்கள், மக்கள் மன்றங்களிலும் பாஜ அரசை எதிர்த்து தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறோம். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் திரளாக பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.