ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணி ஆய்வு கூட்டத்திற்கு வருகை தந்த
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் சார்பில் பூரண கும்ப மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆட்சியர் கொ.வீரராகவ ராவ், சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் எம்.மணிகண்டன், என்.சதன் பிரபாகர், காவல் துறை துணை தலைவர் என்.எம்.மயில் வாகணன், காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இதைத் தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், ரூ.70.54 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். ரூ.24.24 கோடி மதிப்பிலாக நிறைவுற்ற 844 திட்டப்பணிகளையும் நேரில் தொடங்கி வைத்தார்.
இந்திய, சீன லடாக் எல்லையில் வீரமரணமடைந்த ராணுவ வீரர் பழனி மனைவி வானதி தேவிக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணி ஆணை வழங்கினார். தேர்வு செய்யப்பட்ட 15,605 பயனாளிகளுக்கு ரூ.72.81 கோடி என ரூ.167.61 கோடி மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார். தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்புப் பணி, வளர்ச்சிப்பணிகள் குறித்து பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். அதன்பின், பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகளை சந்திக்கிறார்.