×

குளத்தூர் அருகே 19 வயது வாலிபருடன் 25 வயது மாணவி ஓட்டம்: ‘வயசுக்கு வந்ததும் கல்யாணம்’ - பெற்றோர் சமரசம்

குளத்தூர்: குளத்தூர் அருகே 19 வயது வாலிபருடன் ஓட்டம் பிடித்த 25 வயது கல்லூரி மாணவியை போலீசார் மீட்டனர். வாலிபருக்கு திருமண வயது  வந்ததும் முறைப்படி திருமணம் முடித்து வைப்பதாக காவல் நிலையத்தில் பெற்றோர்கள் சமரசம் செய்தனர்.தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 25 வயது கல்லூரி மாணவி. ராமநாதபுரத்தில் உள்ள கல்லூரியில் பயின்று  வந்தார். தற்போது கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருந்து வந்தார். அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த உறவினர் மகனான 19 வயது வாலிபர்  மாணவி வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். சிறியவன்தானே என இதனை மாணவியின் வீட்டிலும் கண்டுகொள்ளவில்லை.
 இந்நிலையில் வயது வித்தியாசம் இன்றி அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. உறவினர் மகன் என்றாலும் இருவருக்குமிடையே உள்ள வயது  வித்தியாசத்தால் தங்கள் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்க மாட்டார்கள் என நினைத்து கடந்த வாரம் இருவரும் வீட்டில் இருந்து வெளியேறி  மற்றொரு உறவினர் வீட்டில் தஞ்சம் புகுந்தனர்.   

இதையடுத்து இரு தினங்களுக்கு முன் இருவரது பெற்றோரும் குளத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து நேற்று போலீசார்  காதலர்களை மீட்டு காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, காதலனுக்கு திருமண வயது வந்தபின் மணமுடித்து  வைப்பதாக இருவரது பெற்றோரும் தெரிவித்தனர். இதனை ஏற்றுக்ெகாண்ட மாணவி, காத்திருந்து காதலனை திருமணம் செய்து கொள்வதாக  தெரிவித்தார். அதன்பிறகு இருவரையும் அவரவர் வீட்டிற்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர்.



Tags : student ,Kulathur , Near Kulathur With a 19-year-old teenager 25-year-old student flow: ‘Marriage on reaching adulthood’ - Parental Compromise
× RELATED சிவில் சர்வீஸ் தேர்வில் போட்டிகள்...