சென்னை: கல்லூரி மாணவர்கள் அனைவரும் பாஸ் என அறிவித்த முதல்வருக்கு மாணவர்கள் போஸ்டர் அடித்தும் கட்அவுட் வைத்தும் நன்றி தெரிவித்து வருகின்றனர். முதல்வர் பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களை பொறுத்தவரையில் இறுதித் தேர்வு தவிர மற்ற பருவத் தேர்வுகளில் மாணவர்கள் அரியர் வைத்திருந்து அதை இந்த ஆண்டு எழுத கட்டணம் செலுத்தி இருந்தால் அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அறிவிக்கப்படும்.
மேலும் படித்து முடித்து எத்தனை ஆண்டுகள் கழித்து இருந்தாலும் அரியர் வைத்திருந்து அந்த தேர்வுக்கு மாணவர்கள் கட்டணம் செலுத்தி இருந்தால் அந்த தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாவர். மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் உயர்கல்வித்துறை அரசாணை வெளியிடும், எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தேர்வு எழுத பதிவு செய்திருந்தால் அரியர் வைத்தவர்கள் பாஸ் என்ற அறிவிப்புக்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்து ஈரோடு மாவட்டத்தில் போஸ்டர் மற்றும் கட் அவுட்டுகள் ஒட்டப்பட்டுள்ளன.
’அரியர் மாணவர்களின் அரசனே’ என்றும் கூறி அதில் ’எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம், உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு என்ற திருக்குறளையும் பதிவு செய்து எடப்பாடி அவர்களை நீர் வாழ்க வாழ்க என்று அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இங்கனம் அரியர் மாணவர்கள் என்றும் அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.