புதுடெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டுமென பல கட்டங்களாக அப்பகுதி மக்கள் போராடி வந்தார்கள். குறிப்பாக, குமரெட்டியாபுரம் மக்கள் 100வது நாளான 2018, மே மாதம் 22ம் தேதி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்த கூடிய மக்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமாக துப்பாக்கிசூடு நடத்தி 15 பேர் உயிரிழந்ததுடன், 150க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தார்கள். இதன்பின்னரே, மே மாதம் 28ம் தேதி தமிழக அரசு அந்த ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான தடை உத்தரவை பிறப்பித்து ஆலைக்கு சீல் வைத்தது. இந்த தடை உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்திலும், பசுமை தீர்ப்பாயத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வழக்குகளை தொடுத்திருந்தது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு 815 பக்க தீர்ப்பை வழங்கியது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி இல்லை. ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும். ஸ்டெர்லைட் ஆலையை மூடியதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. என நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது. ஸ்டெர்லைட் வழக்கு தீர்ப்பை வரவேற்று தூத்துக்குடியில் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய போவதாக வேதாந்தா நிறுவனம் தெரிவித்திருந்தது. எனவே, மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இந்த நிலையில், தமிழக அரசு சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பு கருத்தையும் கேட்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.