சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை: கிரிமினல் சட்டங்களை திருத்துவதற்கான முயற்சியில் மோடி அரசு மீண்டும் ஈடுபட்டுள்ளது. உள்துறை அமைச்சகத்தால் இதற்கென ஐந்து பேர் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. பல ஜனநாயக விரோதமான சட்டத் திருத்தங்களை தற்போதுள்ள பாஜ அரசு, கிரிமினல் சட்டங்களில் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. இதை அனுமதித்தால் நமது நாடு சனநாயகப் பாதையிலிருந்து முற்றிலும் விலகி, அதற்கு நேரெதிரான நாசகாரப் பாதையில் பயணிக்கும்.
கொரோனா பேரிடர் பொது முடக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு பாராளுமன்றத்தை புறக்கணித்து இப்படியான சட்ட திருத்தங்களைக் கொண்டுவர பாஜ அரசு முற்படுவது அதனுடைய தீய உள்நோக்கத்தையே காட்டுகிறது. எனவே, சனநாயத்தைப் பாதுகாத்திட இந்திய தேசத்தை பாதுகாத்திட இந்த குழுவின் செயல்பாட்டை உடனடியாக நிறுத்திவைக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு என்பது மாநில அரசின் அதிகாரப் பட்டியலில் இருப்பதால் இந்த குழுவை தமிழக அரசு ஏற்கக்கூடாது.