×

மதுரை ஆவின் கூட்டுறவு நாணய சங்கத்தில் ரூ.7.92 கோடி கையாடல் செய்த புகாரில் தலைவர் சஸ்பெண்ட்

மதுரை: மதுரை ஆவின் கூட்டுறவு நாணய சங்கத்தில் ரூ.7.92 கோடி கையாடல் செய்த புகாரில் தலைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சங்கத்தின் ஊழியர் வைப்பு நிதியிலிருந்து கையாடல் என எழுந்த புகாரில் செயலாளரும் 6 மாதத்துக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தலைவர் பாண்டி, துணைத் தலைவர் பரமானந்தத்தை சஸ்பெண்ட் செய்து கூட்டுறவு இணைப்பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். பதிவாளர் அளித்த புகாரில் செயலாளர் மதலையப்பன், கணக்காளர் ஜெகதீசன் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரையில் ஆவின் ஊழியர்களுக்கான கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணய சங்கத்தில் சுமார் 8 கோடி ரூபாய் அளவிற்கு கையாடல் நடந்ததும், அதை கூட்டுறவுத்துறை உறுதி செய்து சம்மந்தப்பட்டவர்களிடம் வசூலிக்க உத்தரவு பிறப்பித்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தென்மாவட்டங்களான மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பணிபுரியும் ஆவின் ஊழியர்களுக்கு, குறைந்த வட்டியில் நீண்ட கால குறுகிய கால கடன்கள் வழங்கவும், அவர்களின் எதிர்கால வாழ்வுக்கு சிக்கனமாக சேமிக்கும் பழக்கத்தை உருவாக்க மதுரை பால் திட்ட ஊழியர்கள் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்கம் உருவாக்கப்பட்டது.

இச்சங்கங்கள் அந்தந்த பகுதி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் பெற்று, நிர்வாகச் செலவுகளுக்கு இரண்டு சதவிகித கூடுதல் வட்டி நிர்ணயித்து, சங்க உறுப்பினர்களுக்கு குறுகிய மற்றும் நீண்ட கால கடன் வழங்கிடும். அவ்வாறு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் பெறும் கடனுக்கான வட்டி விகிதத்தை விட குறைவான வட்டியில், பி கிளாஸ் அங்கத்தினர்கள் மூலம் நீண்ட கால வைப்புத் தொகை பெற்று சங்கத்தின் லாபத்தை இரட்டிப்பாக்கி கொள்ளும். இந்த முறையில் மதுரை மாவட்ட சங்கங்கள் பெருமளவு நிரந்தர வைப்புத் தொகைகளை பெற்று நல்ல இலாப நோக்கத்தில் செயல்பட்டு வந்தன.

இந்நிலையில், ஓய்வு பெற்ற ஊழியர்களின் சேமிப்பு கணக்கில் இருந்த ரூ.7.92 கோடியை கூட்டுறவு சங்க நிர்வாகிகள் கையாடல் செய்தது 2017–2018ஆம் நிதியாண்டிற்கான கணக்குகள் தணிக்கையில் தெரியவந்துள்ளது. அது மட்டுமின்றி கையாடல் செய்யப்பட்ட தொகையை சம்மந்தப்பட்டவர்களிடமிருந்து வசூலிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஆவின் நிர்வாகமும், கூட்டுறவுத்துறையும் வேடிக்கை பார்ப்பதாக ஆவினில் பணியாற்றும் தொழிலாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.



Tags : Madurai Avin Co-operative Monetary Union Madurai ,Aavin , Madurai, Aavin
× RELATED ஆவின் பால் பாக்கெட்டுகளில்...