சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 85.80 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர், என்று இணை ஆணையர் (கல்வி) சங்கர்லால் குமாவத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
சென்னை மாநகராட்சி கல்வித் துறையின் கீழ், 32 சென்னை மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. அதில் 2020ம் ஆண்டு நடைபெற்ற 12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 1,675 மாணவர்கள், 2,973 மாணவியர்கள் என மொத்தம் 4,648 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினார்கள். இதில் 1,306 மாணவர்கள், 2,682 மாணவியர்கள் என மொத்தம் 3,988 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 85.80 ஆகும்.
கணினி அறிவியல் பாடத்தில் 6 மாணவர்கள் 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். மேலும், 6 மாணவர்கள் 550 மற்றும் 550க்கும் மேல் மதிப்பெண்களும், 53 மாணவர்கள் 500க்கும் அதிகமான மதிப்பெண்களும், 219 மாணவர்கள் 450க்கும் மேல் மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். மேற்கு மாம்பலம், சென்னை மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி விழுக்காடு பெற்றுள்ளது மேலும் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டம்: சென்னை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களில் 93.45 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னையை பொறுத்தவரையில் மொத்தம் 45646 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 42 ஆயிரத்து 655 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் மாணவர்களின் தேர்ச்சி வீதம் 90.65, மாணவியர் தேர்ச்சி வீதம் 95.81 சதவீதம். இது தவிர சென்னையில் உள்ள 22 அரசு மேனிலைப் பள்ளிகளில் படித்த மாணவர்களில் பிளஸ் 2 தேர்வு எழுதியோர் 3830 பேர். அவர்களில் 3334 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி வீதம் 87.05 சதவீதம். * சென்னை மாநகராட்சியில் உள்ள 8 சிறுவர் காப்பகங்களில் 236 சிறுவர்கள் தங்கியுள்ளனர். இவர்களில் 11 பேர், 12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுதினர். இவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.