×

இந்தியா - சீன எல்லை பிரச்சினையில் பிரதமர் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு திமுக உறுதியுடன் துணை நிற்கும்: மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை : இந்திய - சீன எல்லைப் பிரச்னையில் பிரதமர் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் திமுக துணை நிற்கும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று மாலை நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் பேசியதாவது:முதலில், எல்லையில் இறுதிவரை போராடி- தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்துள்ள - அனைத்து இந்திய இராணுவ வீரர்களுக்கும், வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தனது இன்னுயிரைத் தியாகம் செய்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனி உள்ளிட்ட அனைத்து இந்திய ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கும், திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.பிரதமர் குறிப்பிட்டுள்ளது போல், “உயிரிழந்த இராணுவ வீரர்களின் தியாகம் ஒரு போதும் வீண் போகாது”. அந்தத் தியாகங்கள் இந்த நாட்டை மேலும் மேலும் ஒருமைப்படுத்தி- நாட்டு மக்களுக்கு வலிமையை ஊட்டும். இன்று நாம் மிக கடினமான தருணத்தில் இருக்கிறோம். ஒருபக்கம் கோவிட்-19 பேரிடருடனான போராட்டம், இன்னொரு பக்கம் சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சி.

திமுகவைப் பொருத்தவரை, இதுபோன்ற காலங்களில் நாட்டின் நலன் சார்ந்து நிற்கும் இயக்கம். இங்கே பல்வேறு அரசியல் இயக்கங்கள், வெவ்வேறு கருத்தியலுடன் இருக்கலாம். நாட்டுப் பற்று என வந்தால் நமது குடிமக்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய ஒரு தாய் பிள்ளைகளாக ஒற்றுமையுடன் இணைவோம். இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாத்திட வேண்டும் என்ற ஒற்றை நோக்கோடுதான் நாம் அனைவரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருக்கிறோம். அதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. தன்னுடைய நிலத்திற்கும் மக்களுக்கும் வரும் சவால்களை முறியடிக்கும் வல்லமை இந்தியாவுக்கு உண்டு. திமுகவைப் பொருத்தவரை, 1962 இந்தியா-சீனப் போராக இருந்தாலும், 1971 இந்தியா - பாகிஸ்தான் போராக இருந்தாலும், 1999-ல் கார்கில் போராக இருந்தாலும், நாட்டின் பக்கமும், நாட்டு மக்கள் மற்றும் அரசாங்கத்தின் பக்கமும்தான் எப்போதும் நின்றிருக்கிறோம்.

பண்டித ஜவகர்லால் நேருவாக இருந்தாலும், இந்திரா காந்தியாக இருந்தாலும்; வாஜ்பாய்யாக இருந்தாலும், இந்நாட்டுப் பிரதமர்களின் கரத்தை வலுப்படுத்தியிருக்கிறோம். இந்த அனைத்துக் கட்சிகள் கூட்டத்தைக் கூட்டியிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியை ஆதரிப்பதில் எங்களுக்கு எவ்விதத் தயக்கமும் இல்லை. 1962 போரின் போது முதல் களப்பலியானவர் தமிழகத்தில் உள்ள தூத்துக்குடியைச் சேர்ந்த வீரர் செல்வராஜ் என்பதை நினைவு கூர்கிறேன். இன்றைக்கு 58 ஆண்டுகள் கடந்த பின்னரும் - ராணுவ வீரர் பழனியைத் தமிழகம் தியாகம் செய்திருக்கிறது. நாட்டைப் பாதுகாக்கத் திமுகவும், தமிழக மக்களும் முதலில் வருவார்கள். “அந்நிய நாட்டின் ஆக்கிரமிப்பில் இருந்து, இந்தியா தனது சுயமரியாதையையும், ஒவ்வொரு அங்குல நிலத்தையும் பாதுகாக்கும்” என்ற பிரதமரின் கருத்தை நான் வரவேற்கிறேன். இத்தருணத்தில் இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் பாதுகாக்க, பிரதமர் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் திமுக உறுதியுடன் துணை நிற்கும். போர்க்குரல் ஒலிக்கும் போது நாம் பின்வாங்க மாட்டோம். ஒரே நாடாக நாம் முன்சென்று, இந்திய நாட்டின் பெருமையை நிலைநாட்டிடுவோம். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

அமைச்சர் அன்பழகன் உடல்நலம் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் விசாரிப்பு
திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தேன். அவர் விரைவில் முழு நலம் பெற்று மக்கள் பணியாற்ற வர வேண்டும். பொதுவாழ்வில் இருப்பவர்கள் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Tags : MK Stalin ,DMK ,India ,China ,Modi ,China Border Issue DMK , MK Stalin,All Pary Meet,India,China Border,Ladakh,Pm Modi,DMK
× RELATED வாக்கு எண்ணிக்கைக்கு 6 நாட்களே உள்ள...