சென்னை : 7 பேர் விடுதலைக்காக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய அரசு, நளினி, முருகன் வெளிநாடுகளில் உள்ள உறவினர்களிடம் பேச அனுமதி மறுப்பது ஏன் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி மற்றும் முருகன் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினியின் தாயார் பத்மா ஆட்கொணர்வு வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கில் இருவரும் இலங்கையில் உள்ள முருகனின் தாயார் சோமனியம்மாளிடம் தினமும் 10 நிமிடம் வாட்ஸ் அப் வீடியோ காலில் பேச அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.மேலும் முருகன். லண்டனில் உள்ள தங்கையுடனும் பேச அனுமதிக்கள் வேண்டும்.
ஏற்கனவே காலமான தனது தந்தையின் உடலை வீடியோ கால் மூலம் பார்க்க முருகனுக்கு தமிழக அரசு அனுமதி மறுக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டியிருந்தார்.இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா அமர்வு விசாரணை வந்தது. அப்போது, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன் ஆஜராகி,இந்தியாவுக்குள் உறவினர்கள்,நண்பளுடன் பேச அனுமதிக்க தயார். வெளிநாடுகளில் உள்ளவர்களிடம் பேச அனுமதிக்க முடியாது. இருந்தபோதிலும் வெளிநாட்டில் லேண்ட் லைனில் பேச அனுமதிப்பது தொடர்பாக மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும். அவர்கள் வேறு மொழியில் பேசினால் எங்களால் தெரிந்துகொள்ள முடியாது, என்றார். இதனை கேட்ட நீதிபதிகள்,நளினி,முருகன் தமிழர்கள்தானே? சட்டமன்றத்தில் ஏழுபேரை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசு, உறவினர்களிடம் பேச அனுமதி மறுப்பது ஏன்? ஏன் இந்த முரண்பாடு?அரசு மனிதாபிமானத்துடன் செயல்பட வேண்டும், என்று அறிவுரை வழங்கினர். அத்துடன் அரசின் உரிய பதிலை நாளை தெரிவிக்க உத்தரவிட்டு, நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.