சென்னை: சென்னையில் பிரபல தொழிலதிபர் மற்றும் அவரது மனைவி உட்பட பணியாளர்கள் 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் சாந்தோம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை சாந்தோம் பகுதியில் வசித்து வரும் பிரபல தொழில் அதிபர் ஒருவர் வெளிநாடுகளுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். இவருக்கு சளி மற்றும் காய்ச்சல் இருந்தது இதனால் அந்த தொழிலதிபருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பெற்று குணம் அடைந்தார்.
இந்நிலையில், அவரது வீட்டு வேலை செய்து வந்த 6 பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 6 பணியாளர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. உடனே அனைவரையும் சுகாதாரத்துறை அலுவலர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளர். இதற்கிடையே தொழிலதிபரின் மனைவிக்கும் கொரோனா தாக்கியிருப்பது பரிசோதனையில் உறுதியாகி உள்ளது. இதையடுத்து தொழிலதிபரின் மனைவி நேற்று ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சாந்தோம் பகுதியில் தொழிலதிபர் மற்றும் அவரது மனைவி வீட்டில் வேலை செய்து வந்த 6 பணியாளர்கள் என 8 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தொழிலதிபருடன் தொடர்பில் இருந்த பல தொழிலதிபர்களும் தற்போது கலக்கத்தில் உள்ளனர். மேலும் அவருடன் தொடர்பில் இருந்த நபர்கள் குறித்து போலீசார் உதவியுடன் சுகாதாரத்துறை அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர். இந்த கொரோனா தொற்றால் தொழிலதிபர் வசித்து வரும் பகுதியில் மக்கள் யாரும் வெளியே வராதபடி போலீசார் சீல் வைத்துள்ளனர்.