சென்னை: ஊரடங்கு காரணமாக கட்டுமானம், உணவு, ஜவுளி மற்றும் ஏராளமான சிறு, குறு தொழில் துறைகள் பல முழுவதுமாக வருமானத்தை இழந்துள்ளன. சராசரியாக 54 சதவீத வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு, அடுத்த மாதம் 3ம் தேதி வரை அமலில் உள்ளது. இதனால் பல தொழில்துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, தமிழ்நாடு சிறு மற்றும் குறு தொழில்துறை சங்கத்துடன் இணைந்து பொருளாதார வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய குழுவினர் கள ஆய்வு நடத்தி தமிழக அரசிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். அதில், உணவுத்துறை, கட்டுமானம் சார்ந்த சிறு, குறு தொழில்துறையிருக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு குறித்து தெரிவித்துள்ளனர்.
இந்த அறிக்கையின்படி, சுமார் 15 தொழில்துறைகள் ஆய்வு செயசயப்பட்டுள்ளன. இவற்றின் வருவாய் கடந்த மார்ச் மாதத்தில் 47.7 சதவீதம் சரிந்துள்ளது. அதாவது, கடந்த மார்ச் மாதத்தில் ஊரடங்கு அமலுக்கு வருவதற்கு முன்னதாக 10ம் தேதியில் இருந்தே இந்த துறைகளில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மாதத்தில் இந்த இழப்பு 61.3 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன்படி இந்த 2 மாதங்களில் சராசரியாக 54.5 சதவீதம் வருவாய் குறைந்துள்ளது. மேற்கண்ட 15 துறைகளில் அதிகமாக பாதிக்கப்பட்டவை கட்டிடம் மற்றும் கட்டுமான துறை, ரசாயனம், பர்னிச்சர், டெக்ஸ்டைல் ஆகிய துறைகளில் வருவாய் 100 சதவீதம் இழந்துள்ளது. அதாவது, இந்த துறைகளில் வருவாய் என்பதே சுத்தமாக இல்லை. உணவு துறையில் ஏப்ரல் மதம் வருவாய் 90 சதவீதமும், மார்ச் மாதம் 61 சதவீதமும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆய்வு நடத்திய அனைத்து துறைகளுமே பாரபட்சம் இன்றி பாதிக்கப்பட்டுள்ளன.
சென்னை, கோவை ஆகியவற்றில் சிறு தொழில்துறைகள் மிக அதிகமாக உள்ளன. ஆனால், மதுரையில் தொழில்கள் எண்ணிக்கை குறைவு என்றாலும், எல்லா துறைகளும் அங்கு உள்ளன. எனவே, மதுரையில் கள ஆய்வுகள் நடத்தப்பட்டன. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையில் வருவாய் 25 சதவீதத்துக்கும் மேல் குறைந்துள்ளது. ஊரடங்கால் இவை மூடப்பட்டு கிடப்பதால் சராசரியாக 40 சதவீதத்துக்கும் மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை நம்பியுள்ள நிறுவனங்கள், தொழிலாளர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். பெரிய நிறுவனங்களை போல இவற்றில் வீட்டில் இருந்து வேலை பார்ப்பதற்கான வாய்ப்புகளே இல்லை. பணப்புழக்கம் அடியோடு குறைந்து விட்டது.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி), குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையின் பங்களிப்பு 50 சதவீதமாக உள்ளது. எனவே, நிவாரணம் போன்றவற்றால் எந்த பலனும் இல்லை. இவை மீண்டும் இயங்க கருணை காட்டினால்தான் இந்த தொழில்துறைகள் சற்றேனும் மீற வாய்ப்புகள் உள்ளன என ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
துறை வாரியாக பாதிப்பு
துறை
சராசரி வருவாய் வருவாய் சரிவு
ஏப்ரல் மார்ச் & ஏப். சராசரி
உணவு 45,66,667 90% 75.60%
கட்டுமான துறை 15,00,000 100% 63.30%
டெக்ஸ்டைல் 26,00,000 100% 84.30%
பர்னிச்சர் 13,00,000 100% 88.50%
ரசாயனம் 10,00,000 100% 85%
மின் மற்றும்
மின்னணு துறை 29,33,333 100% 48.80%
சேவைகள் துறை 50,000 100% 85%
அச்சுத்துறை 1,61,400 71.80% 57.60%
ரப்பர் தொழி்ல் துறை 50,00,000 66.70% 60%
சராசரி 21,36,840 61.30% 54.50%