×

ஊரடங்கில் ஓசைப்படாமல் மத்திய அரசு அதிரடி தமிழகத்தில் சுங்க கட்டணம் கிடுகிடு உயர்வு: அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

சென்னை: நாடு முழுவதும் ஊரடங்கு தளர்த்தப்பட்டு, டோல்கேட்கள் திறக்கப்பட்ட நிலையில், சுங்க கட்டணம் கிடுகிடுவென உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 48 டோல்கேட்களில் 26ல் கட்டண உயர்வு அமல்படுத்தப் பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள், விவசாயிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதன் காரணமாக, அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை உயரும் அபாயம் உருவாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதியில் இருந்தும், தமிழகத்தில் கடந்த மார்ச் 24ம் தேதி மாலையில் இருந்தும் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. அத்தியாவசிய வாகனங்களுக்கு மட்டும், டோல்கேட்களில் அனுமதிக்கப்பட்டது.

எந்த சுங்க கட்டணமும் வசூலிக்கவில்லை. இந்த நிலையில், சில மாநிலங்களில் நேற்று ஊரடங்கு தளர்த்தப்பட்டதுடன், டோல் கட்டணமும் வசூலிக்க உத்தரவிடப்பட்டது. டோல்கேட்களில் நுழைந்த லாரிகள், வாகனங்களுக்கு நேற்று அதிர்ச்சி காத்திருந்தது. டோல் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டு இருந்தது தெரிந்தது. தமிழகத்தில் உள்ள 48 தேசிய நெடுஞ்சாலை ஆணைய டோல்கேட்களில் 26 சாவடிகளில் கட்டணம் 5 முதல் 15 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, 3 முதல் 5 சதவீதம் அதிகரித்திருந்தது. ஒரு வழிக்கு மட்டும்தான் இந்த அளவுக்கு உயர்ந்துள்ளது.
 இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் கூறியதாவது: ஆண்டுதோறும் மொத்த விலை குறியீட்டெண் அதிகரிப்பு அடிப்படையில் கட்டண உயர்வு அறிவிக்கப்படும். சுங்க கட்டண நிர்ணயம் மற்றும் வசூல் குறித்த விதி 2008ன் படி, இந்த கட்டண உயர்வு ஏப்ரல் மற்றும் செப்டம்பரில் அறிவிக்கப்படும். அதன்படி, கடந்த ஏப்ரல் 1ம் தேதி ஊரடங்கு அமலில் இருந்ததால் அமல்படுத்த முடியவில்ைல.

மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை அனுமதி அளித்ததை அடுத்து  கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது 26 சுங்கச் சாவடிகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது. மீதம் உள்ள சுங்க சாவடிகளில் வரும் செப்டம்பர் 1 தேதி அப்போதைய நிலவரப்படி உயர்த்தப்படும்’ என்றனர்.
  இந்த கட்டண உயர்வுக்கு லாரி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டோல்கேட்டில்தான், தமிழகத்திலேயே அதிக வாகனங்கள் கடந்து செல்லும். தமிழகம், கர்நாடகா, ஆந்திரா ஆகிய 3 மாநில எல்லையில் உள்ள இந்த டோல்கேட்கள் வழியாக, தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து கர்நாடகா, மத்திய பிரதேசம், குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்களுக்கும், வடமாநிலங்களில் இருந்து தமிழகம் மற்றும் கேரளா, பாண்டிச்சேரி மாநிலங்களுக்கு வரும் வாகனங்களும் கடந்து செல்கின்றன.

இதனால், இந்த டோல்கேட்டில் எப்போதும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும். இதனிடையே, இந்த ஆண்டுக்கான சுங்க கட்டண உயர்வு நேற்று அமலுக்கு வந்தது.  கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் 2020 மார்ச் 31ம் தேதி வரை கார், ஜீப், வேன் போன்ற வாகனங்கள் ஒரு முறை டோல்கேட்டை கடந்து செல்ல 70ம், 24 மணி நேரத்திற்குள் போய் வர 105ம், மாதம் முழுவதும் 50 முறை கடக்க 2,305ம் வசூலிக்கப்பட்டது. மாதம் முழுவதும் 50 முறை கடக்க கட்டணம் 2,390 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, 5 முதல் 550 வரை வாகனங்களுக்கு ஏற்ப கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இவை அனைத்து பாஸ்டேக் வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும். பணம் செலுத்தி செல்லும் வாகனங்கள், ஒவ்வொரு முறையும் கட்டணத்தை செலுத்தியே செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்ததால் டோல்கேட்டில் கட்டணம் செலுத்த தேவையில்லை என மத்திய அரசு அறிவித்தது.

இதனால், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் விவசாய விளைபொருட்களை ஏற்றி சென்ற வாகனங்கள், கட்டணமின்றி சென்று வந்தன. இந்நிலையில், நேற்று (20ம் தேதி) முதல் டோல்கேட்டில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், பஸ்கள் மற்றும் பிற வாகனங்கள் இயங்காததால் டோல்கேட்டில் ஒரு சில வாகனங்கள் மட்டுமே செல்கின்றன. விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை மார்க்கெட்டுக்கு எடுத்து சென்று விற்று வந்தனர். தற்போது டோல்கேட் கட்டணம் வசூலிக்க துவங்கியதால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். டோல்கேட் கட்டண உயர்வால், ஊரடங்கு நேரத்தில் விவசாயிகள் காய்கறி அறுவடையை நிறுத்திவிட்டால், காய்கறி விலை கடுமையாக உயர வாய்ப்புள்ளது. எனவே, விவசாயிகளுக்காவது டோல்கேட் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய கட்டணம் வசூல் விபரம்
* கமர்சியல் வாகனங்களான மினி பஸ் போன்றவற்றுக்கு கடந்தாண்டு 110 என இருந்த கட்டணம் 115 ஆகவும், 165 ஆக இருந்த 24 மணி நேர கட்டணம் தற்போது 175 ஆகவும், 3720 என இருந்த மாத கட்டணம் 3860 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
* பஸ், லாரி போன்ற கனரக வாகனங்கள் ஒருமுறை செல்ல 235லிருந்து 245 ஆகவும், 24 மணி நேர கட்டணம் 350லிருந்து 365 ஆகவும், மாத கட்டணம் 7795லிருந்து 8085 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
* மல்டி ஆக்சில் வாகனங்களுக்கு ஒருமுறை கட்டணம் 365லிருந்து 380 ஆகவும், 24 மணி நேர கட்டணம் 550லிருந்து 570 ஆகவும், மாத கட்டணம் 12,220லிருந்து 12,675 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
* 7 ஆக்ஸில் வாகனங்களுக்கு ஒருமுறை செல்ல 445லிருந்து 465 ஆகவும், 24 மணி நேர கட்டணம் 670லிருந்து 695ம், மாத கட்டணம் 14,880 லிருந்து 15,430 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 26 சுங்கச்சாவடிகள்
1.ஆத்தூர்    (தாம்பரம்-திண்டிவனம்)
2. நல்லூர்    (சென்னை - தடா)
3. பரனூர்    (செங்கல்பட்டு), தாம்பரம்- திண்டிவனம்
4. சூரப்பட்டு    (சென்னை பைபாஸ்)
5. வானகரம்    (சென்னை பைபாஸ்)
6. நெமிலி     (பெரும்புதூர்)
7. வாணியம்பாடி    (கிருஷ்ணகிரி- வாலாஜாபேட்டை)
8. சென்னசமுத்திரம்    (வாலாஜாபேட்டை)
9. கிருஷ்ணகிரி    (ஓசூர் - கிருஷ்ணகிரி)
10. லம்பலக்குடி    (திருச்சி - காரைக்குடி)
11.லட்சுமணப்பட்டி     (திருச்சி - காரைக்குடி)
12. போகலூர்    (மதுரை - ராமநாதபுரம்)
13. நாங்குநேரி     (மூன்றடைப்பு - அஞ்சுகிராமம்)
14. பூதக்குடி    (திருச்சி பைபாஸ்)
15. பாலய கந்தர்வகோட்டை    (தஞ்சாவூர் - புதுக்கோட்டை)
16. பள்ளிகொண்டா    (கிருஷ்ணகிரி - வாலாஜாபேட்டை)
17. சிட்டாம்பட்டி    (திருச்சி பைபாஸ்)
18. பட்டறைபெரும்புதூர்     (திருப்பதி - திருத்தணி - சென்னை)
19. புதுக்கோட்டை    (வைகைக்குளம் (திருநெல்வேலி - தூத்துக்குடி)
20. எஸ்.வி.புரம்    (திருப்பதி - திருத்தணி - சென்னை)
21. சாலைப்புதூர்    (மதுரை - திருநெல்வேலி - பனகுடி - கன்னியாகுமரி)
22.செண்பகம்பேட்டை    (திருமயம் - மானாமதுரை)
23. எட்டூர்வட்டம்    (மதுரை - திருநெல்வேலி - பனகுடி - கன்னியாகுமரி)
24. திருப்பாச்சேத்தி    (மதுரை  - ராமநாதபுரம்)
25. கன்னியூர்    (செங்கம்பள்ளி - கோவை பைபாஸ்)
26. கப்பலூர்    (மதுரை - திருநெல்வேலி - பனகுடி - கன்னியாகுமரி)

Tags : government ,Tamil Nadu ,tariff hike ,state , Curfew, central government, Tamil Nadu, customs duty, essentials
× RELATED கல்வி முன்னேற்றத்தில் தமிழ்நாடு...