சென்னை: தேசிய ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் அவரவர் வீடுகளில் தங்கியுள்ளனர். அவர்களின் பொழுதுபோக்கை கவனத்தில் கொண்டு திரைக்கலைஞர்கள் பலர் தங்கள் சமூக வலைத்தளங்களில் நேரலையில் பேசுகின்றனர். இதுவரை இணையதளம் பக்கம் எட்டிப் பார்த்திருக்காத இயக்குனர் மணிரத்னம், நேற்று முன்தினம் நேரலையில் தோன்றி, ரசிகர்களின் எல்லா கேள்விகளுக்கும் சுவாரஸ்யமாக பதிலளித்தார். 2ம் பாகம் பற்றி கேட்ட கேள்விக்கு பதிலளித்த மணிரத்னம், ‘தற்போது நான் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படம் 2 பாகங்களாக உருவாகிறது’’ என்றார். ‘உங்கள் படத்தில் மனைவி சுகாசினியை நடிக்க வைப்பீர்களா?’’ என்ற கேள்வியை கேட்டு சிரித்த அவர், ‘சுகாசினிக்கு பொருத்தமான கேரக்டர் தானாக அமைய வேண்டும்’’ என்றார்.
‘இயக்குனர் ஐஸ்வர்யா என்னை நடிக்க கேட்டார். நான் மறுத்துவிட்டேன். காரணம், நான் நடித்துவிட்டு மீண்டும் படம் இயக்க சென்றால், என்னிடம் நடிக்கும் நடிகர்கள், ‘நீங்க நடிச்ச லட்சணத்தைதான் நாங்க பார்த்தோமே’’ என்று என்னை கிண்டல் செய்யலாம். அப்போது நான் என்ன செய்ய முடியும்? இப்போது ஒரு இயக்குனராக, எனக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்து, நடிகர்களிடம் நான் என்ன வேண்டும் என்றாலும் சொல்லலாம். எனவே, நான் நடிக்காமல் இருப்பது நல்லது’’ என்றார் மணிரத்னம்.