ஸ்ரீநகர்: காஷ்மீரில் புத்தக வெளியீட்டு நிறுவனம் ஒன்று கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கான தனிமை மையங்களுக்கு 1000 புத்தகங்களை நன்கொடையாக வழங்கி உள்ளது. காஷ்மீரில் தால் லேக் பகுதியில் உள்ள நேரு பூங்காவில் அமைந்துள்ளது குல்ஷன் புத்தக நிலையம். இங்கு 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த புத்தகங்கள் விற்பனைக்கு உள்ளது. இந்நிலையில், காஷ்மீரில் கொரோனா தொற்று காரணமாக ஆயிரக்கணக்கானோர் தனிமைப்படுத்துதல் மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள மையங்களுக்கு குல்ஷன் புத்தக நிலையம் 1,000 புத்தகங்களை நன்கொடையாக வழங்கி உள்ளது.
இதுகுறித்து அதன் உரிமையாளர் அய்ஜாஸ் அகமது கூறுகையில், தனிமை மையங்களில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் நேரத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்தவும், இக்கட்டான சூழலில் கவனத்தை வேறு திசையில் திருப்பி அறிவுக் கண்ணைத் திறக்கவும் இந்த புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன’’ என்று கூறினார். இதேபோல, ஸ்ரீநகர் மேயர் ஜூனைத் அஜிம் தனிமை மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மாணவிகளுக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின் வழங்கி உதவியுள்ளார்.