சென்னை: மின்வாரியத்தில் கேங்மேன் பதவிக்கான எழுத்துத்தேர்வு தமிழகம் முழுவதும் 30 தேர்வு மையங்களில் நேற்று நடந்தது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் 5 ஆயிரம் கேங்மேன் (பயிற்சி) பணியிடங்களுக்கு கடந்த 7.3.2019ல் அறிவிப்பு வெளியானது. இதனைதொடர்ந்து பலரும் இந்த பதவிக்கு விண்ணப்பித்தனர். பிறகு அவர்களுக்கான உடல்தகுதி தேர்வை மின்வாரியம் நடத்தி முடித்தது. இந்த நிலையில் உடல்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எழுத்துதேர்வு, 15.3.2020 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. எழுத்து தேர்வுக்கான நுழைவு சீட்டு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும். மேலும் www.tangedco.gov.in இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொண்டனர். திட்டமிட்டபடி அவர்களுக்கு தமிழகம் முழுவதும் 30 மையங்களில் நேற்று தேர்வு நடைபெற்றது. தேர்வில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு எழுதினர். தேர்வு எழுதுவோருக்கு தடையில்லா மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருந்தது. இதற்கான முடிவுகள் விரைவில் வெளியாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.