கவுகாத்தி: அசாம் மாநிலத்தின் பூர்வீக முஸ்லிம்களாக கருதப்படும் கோரியா, மோரியா, தேசி, ஜோலா ஆகிய 4 சமூகத்தை சேர்ந்த தேயிலைத் தோட்ட பழங்குடி முஸ்லிம்களை அடையாளம் காண அசாம் மாநில அரசு முயற்சித்து வருகிறது.
இந்நிலையில், அசாம் சிறுபான்மையினர் மேம்பாட்டு ஆணையத் தலைவரும் அசாம் ஜனகோஸ்தியா சமன்வே பரிஷத் அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான முமினுல் அயோவால் கூறியதாவது: அசாமில் உள்ள 1.3 கோடி முஸ்லிம் மக்கள் தொகையில், ஏறக்குறைய 90 லட்சம் பேர் வங்கதேசத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். மீதமுள்ள 40 லட்சம் பேர் பல்வேறு பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர்களாவர்.
இவர்கள் சரியான முறையில் அடையாளம் காணப்படாததால், அரசின் சலுகைகளை இழக்க நேரிடுகிறது. என்ஆர்சி.யில் பல லட்சம் வங்கதேசத்தவர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். அதனால் அதனை நம்ப முடியாது. இப்பொழுதே செயல்படாவிடில், லட்சக்கணக்கான பூர்வீக முஸ்லிம்கள் அசாமில் இருந்து விரட்டி அடிக்கப்படுவார்கள். இது தொடர்பாக தேசிய பதிவாளரின் அனுமதியை அரசு பெற வேண்டும். இல்லையெனில், இது சட்டப்படி செல்லாது. இதற்கான முழு முயற்சியையும் சிறுபான்மையினர் நலத்துறை மேற்கொள்ள வேண்டும். கணக்கெடுப்பிற்கு போதுமான ஆள் பலம் இல்லை. எனவே, வருவாய் துறையினர் மூலம் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்றார்.