சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மாணவர்கள் சங்கத் தலைவர் டாக்டர் லட்சுமி நரசிம்மன் திடீரென்று மறைவெய்தினார் என்ற அதிர்ச்சி செய்தி கேட்டு சொல்லொணாத் துயரமுற்றேன். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். 25 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுப் பணியில் சேவையாற்றி வந்த லட்சுமி நரசிம்மன், அண்மையில் 7 நாட்கள் நடந்த மருத்துவர்களின் காலவரையற்ற போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தியவர்களில் முக்கியமானவர். போராட்டத்தில் ஈடுபட்ட 120 மருத்துவர்களை அநியாயமாக தொலைதூரத்துக்கு இடமாற்றம் செய்தது அதிமுக அரசு.
அதில் தர்மபுரி மருத்துவக் கல்லூரியில் பணியாற்றிய டாக்டர் லட்சுமி நரசிம்மன் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடி வந்த அவர் திடீர் மாரடைப்பால் மறைந்திருப்பதற்கு அதிமுக அரசே முழுக்காரணம் என்பது வேதனை அளிக்கிறது. அதிமுக அரசின் இந்த அராஜகத்தையும் அடக்குமுறைகளையும் மருத்துவர்களின் சமுதாயம் ஒருபோதும் மன்னிக்காது. லட்சுமி நரசிம்மனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், சக மருத்துவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.