கொடைக்கானல்: கொடைக்கானலில் இரவு போதை விருந்தில் ஈடுபட்ட 270 இளைஞர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடைக்கானல் அருகே உள்ள குண்டுப்பட்டியில் இருக்கும் தனியார் தோட்டம் ஒன்றில் நேற்றிரவு இரவு போதை விருந்து நடைபெற்றுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த போதை தடுப்பு போலீசார் 100-க்கும் மேற்பட்டோர் நள்ளிரவில் தோட்டத்தை சுற்றி வளைத்தனர். அப்போது அங்கு நூற்றுக்கணக்கான இளைஞர்கள் போதையில் தள்ளாடி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அவர்கள் அனைவரையும் பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர்கள் அனைவரும் தடைசெய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்தியது தெரியவந்தது. பிடிப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஐடி ஊழியர்கள் என கூறப்படுகிறது. வாட்ஸ் அப் மூலம் குரூப் ஒன்றை உருவாக்கி இளைஞர்களை ஒன்றினைத்து இந்த போதை விருந்து நடத்தப்பட்டுள்ளது. பெண்கள், இளைஞர்கள் என 270 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.