வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்காக அயோவா மாகாணத்தில் நடைெபற்ற தேர்தலில் குடியரசு கட்சி உறுப்பினர்களின் 95 சதவீத வாக்குகளுடன் அதிபர் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பரில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தற்போதைய ஆளும் கட்சியான குடியரசு கட்சி சார்பில் அதிபர் டிரம்ப் மீண்டும் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இது தவிர, ஜனநாயக கட்சி சார்பில் 12க்கும் மேற்பட்டோர் வேட்பாளராக விருப்பம் தெரிவித்துள்ளனர். இங்குள்ள 50 மாகாணங்களிலும் குடியரசு, ஜனநாயக கட்சிகள், கட்சி அளவில் தேர்தல் நடத்தி வேட்பாளர்களை தேர்வு செய்வது வழக்கம். இதில் வெற்றி பெற்ற இரு கட்சி வேட்பாளர்கள் வரும் நவம்பரில் நடைபெறும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவார்கள்.
இந்நிலையில், அயோவா மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த தேர்தலில் குடியரசு கட்சி உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவுடன் டிரம்ப் வெற்றி பெற்றார். இது தொடர்பாக அமெரிக்க பத்திரிகையில் வெளியான செய்தியில், `அயோவா மாகாணத்தில் குடியரசு கட்சியினர் 95 சதவீதம் பேரின் ஆதரவுடன் அதிபர் டிரம்ப் மறுபடியும் மகத்தான வெற்றி பெற்றுள்ளார்.’ என கூறப்பட்டுள்ளது.