டெல்லி: முன் ஜாமீனுக்கு குறிப்பிட்ட கால கட்டுப்பாடு விதிப்பது தனிநபர் சுதந்திரத்தை பாதிக்கும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 438வது பிரிவின் கீழ் வழங்கப்படும் முன் ஜாமீனுக்கு குறிப்பிட்ட கால கட்டுப்பாடு விதிக்கலாமா? குற்றம் சாட்டப்பட்டவற்கு நீதிமன்றம் சம்மன் அளித்தவுடன் முன்ஜாமீன், காலம் முடிவுக்கு வந்துவிடுகிறதா? என்ற வழக்கில் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது. இதனை தொடர்ந்து, சுதந்திரமான ஜனநாயக நாட்டில் முன்ஜாமீன் மறுப்பது தனிமனித சுதந்திரத்தை மறுப்பதாகவும் என நீதிபதிகள் கூறினர். ஒரு நபருக்கு வழங்கப்படும் முன் ஜாமீன் ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்திற்கானதாக இருக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
முன் ஜாமீன் வழங்க நீதிமன்றங்கள் நிபந்தனைகள் விதிக்கலாம் என்று குறிப்பிட்ட நீதிமன்றம், ஆனால் அவ்வாறு வழங்கப்படும் ஜாமீன், வழக்கு முடியும் வரை தொடரலாம் என உத்தரவிட்டது. இதையடுத்து, அதிகாரம் மற்றும் பணபலம் மிக்கவர்கள் தங்களுடைய செல்வாக்கை பயன்படுத்தி எதிரிகளை போலி வழக்குகளில் கைது செய்வதை தடுப்பதற்கு முன் ஜாமீன் உதவி செய்வதாக நீதிபதிகள் கூறினார்கள். மேலும், ஒரு நபர் மாதக்கணக்கில் சிறையில் வாடுவதை தடுப்பதற்கும், அதன் மூலமாக சமூகத்தில் அவர்களுக்கு ஏற்படும் களங்கத்தை தவிர்க்கவும் முன்ஜாமீன் உதவுவதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.