சென்னை: இந்தியாவில் தீவிரவாதத்திற்கு என்றுமே இடம் இல்லை. இந்தியா என்றும் இந்து நாடுதான் என்று அம்பத்தூர் பகுதி தேமுதிக சார்பில் நடந்த பொங்கல் விழாவில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசினார். அம்பத்தூர் பகுதி தேமுதிக சார்பில் பொங்கல் விழா அம்பத்தூரை அடுத்த கொரட்டூர் பஸ் நிலையத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. பொங்கல் விழாவை கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தொடங்கி வைத்து பேசியதாவது: எல்லா மதங்களுக்கும் விஜயகாந்த் மதிப்பளித்து வருகிறார். தேமுதிக அனைத்து மதவிழாக்களையும் கொண்டாடி வருகிறது. இந்தியா என்றும் இந்து நாடு தான். நமது சகோதரர்களாக இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் மதிக்கப்படுகிறார்கள்.
இந்தியாவில் எந்த பிரிவினைக்கும் இடமில்லை. தீவிரவாத செயலுக்கு இந்தியாவில் என்றும் இடம் கிடையாது. நாம் உள்ளாட்சி தேர்தலில் பெரிய வெற்றியை பெற்றுள்ளோம். தமிழகத்தில் மீண்டும் தேமுதிக விஸ்வரூபம் எடுக்கும். மாநகராட்சி தேர்தல் பிப்ரவரியில் வருகிறது அதிலும், நாம் பெரிய வெற்றியை பெறுவோம். இவ்வாறு அவர் பேசினார். முடிவில், 300க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வேட்டி, சேலை மற்றும் பொங்கல் பரிசுகளை கட்சியின் தலைவர் விஜயகாந்த் வழங்கினார். நிகழ்ச்சியில், மாநில துணைச் செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், ப.பார்த்தசாரதி, மாவட்ட துணைச்செயலாளர் எம்.ஆனந்த்குமார், அம்பத்தூர் பகுதி தலைவர் இ.பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.