சென்னனை: நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள பாஸ்டேக் ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை தியாகராய நகரை சேர்ந்த வழக்கறிஞர் கபிலன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், பாஸ்டேக் முறையில் உள்ள குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. பாஸ்டேக் திட்டத்தில் இணைக்கப்பட்டு வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த தனது காருக்கு நள்ளிரவில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக குறுச்செய்தி வந்ததாக கபிலன் கூறியுள்ளார். பின்னர், பாஸ்டேக் கணக்கை சோதித்தபோது அதிலிருந்து கட்டணம் எடுக்கப்பட்டது உறுதியானதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குளறுபடி குறித்து பாஸ்டேக் மற்றும் ஏர்டெல் பேமெண்டில் புகாரளித்தும் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என மனுதாரர் தெரிவித்துள்ளார். எனவே, பாதுகாப்பற்ற பாஸ்டேக் பணப்பரிமாற்ற முறையில் உள்ள பாதகங்களை கருத்தில் கொண்டு இந்த திட்டத்திற்கான அரசாணையை ரத்து செய்ய உத்தரவிடுமாறு அவர் கேட்டக்கொண்டுள்ளார். இந்த வழக்கானது நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சுங்கச்சாவடிகள் வழியாக செல்லும் வாகனங்கள் சுங்க கட்டணம் செலுத்துவதற்காக பல மணி நேரம் காத்திருக்க வேண்டும். இதனால், எரிபொருள் மட்டுமின்றி கால விரயமும் ஏற்படுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பாஸ்டேக் எனப்படும் தானியங்கி சுங்க கட்டணம் வசூலிக்கும் முறையை மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் அமல்படுத்தியது குறிப்பிடத்தக்கது.