மும்பை: டிஎச்எப்எல் நிறுவனம் மீது திவால் நடவடிக்கை மேற்கொள்வதற்கான விண்ணப்பத்தை, தேசிய கம்பெனிகள் தீர்ப்பாயத்துக்கு ரிசர்வ் வங்கி நேற்று முன்தினம் அனுப்பியது. டிஎச்எப்எல் நிறுவனம் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி புகாரில் சிக்கியுள்ளது. இந்த நிறுவனத்தில் பணம் போட்ட டெபாசிட்தாரர்கள், தங்கள் பணம் கிடைக்குமா என தவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், டிஎச்எப்எல் நிர்வாக குழுவை ரிசர்வ் வங்கி கலைத்து உத்தரவிட்டது. அதோடு, அந்த நிறுவனத்தை நிர்வகிக்க, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன்னாள் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஆர்.சுப்பிரமணியகுமார் நியமிக்கப்பட்டார். இவருக்கு ஆலோசனை கூற 3 பேர் கொண்ட குழுவை ரிசர்வ் வங்கி அமைத்தது.
டிஎச்எப்எல், புதிய திவால் சட்டப்படி முதன்முதலாக திவால் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும் வங்கிசாரா நிதி நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் மொத்த கடன் 83,873 கோடி. இதில், டெபாசிட் 6,188 கோடி. மாற்ற இயலாத கடன் பத்திரங்கள் 41,431 கோடி அடங்கும். இதுதவிர, பொதுத்துறை வங்கிகளுக்கு இந்த நிறுவனம் தர வேண்டிய தொகை 36,000 கோடி என கூறப்படுகிறது. நடப்பு நிதியாண்டின் 3வது காலாண்டில் பெரும்பாலான வங்கிகள் இந்த நிறுவனம் தர வேண்டிய கடனை வராக்கடனாக அறிவிக்க உள்ளன. இந்நிலையில், டிஎச்எப்எல் நிறுவனத்தின் மீது திவால் நடவடிக்கை மேற்கொள்ளவதற்கான விண்ணப்பத்தை தேசிய கம்பெனிகள் தீர்ப்பாயத்துக்கு ரிசர்வ் வங்கி நேற்று அனுப்பியுள்ளது.