சென்னை: பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் இயக்குநர்கள் 3 பேர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான ஆணையை பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளர் நேற்று வெளியிட்டார். பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் அடிக்கடி மாற்றப்பட்டு வருகின்றனர். அப்படி மாற்றப்படும்போது பொறுப்பேற்ற சில மாதங்களில் மீண்டும் அவர்கள் வேறு இடத்துக்கு மாற்றப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இணை இயக்குநர்கள்தான் இப்படி அடிக்கடி மாற்றப்படுவார்கள். ஆனால் இப்போது இயக்குநர்கள் நிலையும் அப்படியாகிவிட்டது. கடந்த மாதம்தான் பள்ளிக் கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் அங்கிருந்து மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக கண்ணப்பன் நியமிக்கப்பட்டார். அதேபோல தொடக்க கல்வித்துறை, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்ககம் ஆகியவற்றின் இயக்குநர்களும் மாற்றப்பட்டனர்.
தற்போது, 3 இயக்குநர்களை அதிரடியாக வேறு இடங்களுக்கு மாற்றி பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் ஆணையிட்டுள்ளார். இதன்படி, தற்போது மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் பழனிச்சாமி அங்கிருந்து மாற்றப்பட்டு, தொடக்க கல்வி துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளர் உமா, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். தொடக்க கல்வி இயக்ககத்தின் இயக்குநர் சேதுராம வர்மா, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.