ஆம்பூர் : ஆம்பூர் அருகே கோழிப்பண்ணையில் புகுந்து 20 கோழிகளை விழுங்கிய 10 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்து காப்பு காட்டில் விட்டனர். ஆம்பூர் அடுத்த சின்னமலையாம்பட்டை பகுதியை சேர்ந்தவர் விவசாயி யுகபாரதி. இவருக்கு தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கோழிப்பண்ணை உள்ளது. நேற்று காலை கோழிப்பண்ணைக்கு தொழிலாளர்களுடன் சென்றார்.அந்த நேரத்தில் பண்ணையில் உள்ள கோழிகள் அலறி அடித்த வண்ணம் இருந்துள்ளன.
இதனால் சந்தேகம் அடைந்த தொழிலாளர்கள் கோழிப்பண்ணை உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கோழிகளை விழுங்கிய நிலையில் 10 அடி நீள மலைப்பாம்பு ஒன்று இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக யுகபாரதி ஆம்பூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனக்காப்பாளர் விசுவநாதன், வனக்காவலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பொதுமக்கள் உதவியுடன் மலைப் பாம்பை பிடித்தனர். அதன் பின்னர், பிடிபட்ட அந்த மலைபாம்பை சுட்டக்குண்டா அருகே துருகம் காப்புக்காட்டில் விட்டனர். இதில் 20 கோழிகளை மலைப்பாம்பு விழுங்கியதாக யுகபாரதி தெரிவித்தார்.