புதுடெல்லி: மக்களிடம் உள்ள தங்கத்தை கணக்கு கேட்கும் திட்டம் எதுவும் வருமான வரித்துறையின் பரிசீலனையில் இல்லை என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நாட்டில் உள்ள மக்கள் பலர் கணக்கில் காட்டப்படாத பணத்தை தங்கமாக வைத்துள்ளனர். இந்தியாவில் மக்கள் வைத்திருக்கும் தங்கத்தின் அளவு 25 ஆயிரம் டன் முதல் 30 ஆயிரம் டன் வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. தங்கம் வடிவில் உள்ள கருப்பு பணத்தை மீட்க, ரசீது இல்லாமல் வாங்கிய தங்கத்தை மக்கள் மத்திய அரசிடம் தெரிவித்து அதற்கு 30 சதவீதம் வரி செலுத்தும் திட்டம் விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாக ஊடகங்களில் நேற்று முன்தினம் செய்திகள் வெளியாயின. பணமதிப்பிழப்பு நடவடிக்கை, பிரதமரின் காரீப் கல்யாண் யோஜனா போன்ற திட்டத்தால் பல பாதிப்புகளைச் சந்தித்தவர்களுக்கு, இந்த செய்தி பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், ‘‘ஊடகங்களில் வெளியானதுபோல் மக்களிடம் உள்ள தங்கத்தை கணக்கு கேட்கும் திட்டம் எதுவும் வருமான வரித்துறையின் பரிசீலனையில் இல்லை. அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் பணிகள் தொடங்கியுள்ளதை முன்னிட்டு, இதுபோன்ற யூக செய்திகள் வெளியாவது வழக்கம்’’என்றனர்.