×

மொத்தமுள்ள 37,553 அரசுப் பள்ளிகளில் 20,332 பள்ளிகளுக்கு இணையதள வசதி: அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை 20,332 அரசுப் பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: புத்தகங்கள் மற்றும் கரும்பலகைகள் வாயிலாக நடைபெற்ற கற்றல் கற்பித்தல் நிகழ்வுகள் தற்போது உரைகள், படங்கள், ஆடியோ மற்றும் வீடியோ போன்ற தொழில்நுட்ப வடிவங்களாக மாறி வரும் சூழ்நிலையில், அரசுப் பள்ளிகளில் ரூ.519.73 கோடி மதிப்பீட்டில் 8,180 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களும், ரூ.455.32 கோடி மதிப்பீட்டில் 22,931 திறன்மிகு வகுப்பறைகளும் (Smart Class rooms) 46,12,742 மாணவ மாணவிகள் பயனடையும் வகையில் அமைக்கப்பட்டு வருகின்றன. 6,023 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் 5 மற்றும் 6 Mbps இணைய வசதி ஏற்படுத்தப்பட்டு மாணவர்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போதைய நிலையில் மாணவர்களின் பாடப் பொருள்கள் அனைத்தும் காணொலி வாயிலாக எளிமையாகப் புரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே இருந்த 5 மற்றும் 6 Mbps இணைய வேகத்தை மேலும் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன்மூலம் 46 லட்சம் மாணவர்கள் கடினமான பாடப் பொருட்களை எளிமையாக காணொலி வாயிலாக கற்பதற்கு வழி வகை ஏற்படும். இதற்காக தமிழ்நாடு அரசு பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்துடன் இணைந்து இணையதள வசதியை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டிலுள்ள 6,223 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், இதுவரை 5,913 பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 6,992 நடுநிலைப் பள்ளிகளில் 3,799 பள்ளிகளில் இவ்வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தொடக்கப் பள்ளிகளைப் பொறுத்தமட்டில் மொத்தமுள்ள 24,338 பள்ளிகளில் 10,620 பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்பள்ளிகளுக்கு அதிவேகம் கொண்ட இணைய இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 37,553 அரசுப் பள்ளிகளில் 20,332 பள்ளிகளில் இப்பணியானது முழுமையாக முடிக்கப்பட்டு, மீதமுள்ள 17,221 அரசுப் பள்ளிகளுக்கு ஜுன் மாத இரண்டாம் வார இறுதிக்குள் நிறைவடையும் வண்ணம் பணிகள் நடைபெற்று வருகிறது.

 

The post மொத்தமுள்ள 37,553 அரசுப் பள்ளிகளில் 20,332 பள்ளிகளுக்கு இணையதள வசதி: அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,Tamil Nadu government ,
× RELATED பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும்,...