சென்னை: சமூக ஊடகங்களில் எனக்கு எதிராக அவதூறு பதிவு செய்து வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பேராசிரியர் சுந்தரவள்ளி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பேராசிரியர் சுந்தரவள்ளி நேற்று அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 18 ஆண்டுகளுக்கு மேலாக சமூக தளத்தில் பெண் விடுதலை தொடர்பாகவும், சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்டோருக்கு ஆதரவாகவும் செயல்பட்டு கொண்டிருக்கிறேன்.
சில ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் என்னை குறித்து மிக இழிவான சொற்களை கொண்டு ஆபாச படங்களுடன் என் முகத்தை ஒட்டி வன்ம பிரசாரத்தில் சிலர் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.இதேபோல், முகநூல் பக்கங்களில் என்னை பாலியல் வழக்கில் கைது செய்ததாக போலியாக தயாரித்து பரப்பி உள்ளனர். இது எனது பொது வாழ்க்கைக்கு அவமானத்தை ஏற்படுத்தக்கூடிய செயலாக உள்ளது. அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.