×

உ.பி-யில் நடைபெறவுள்ள 11 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தனித்து போட்டி: பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அறிவிப்பு

டெல்லி: உத்தரபிரதேசத்தில் நடைபெறவுள்ள 11 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். தனித்துப் போட்டியிட்டாலும் அகிலேஷ் உடனான நட்பு தொடரும் என்று கூறியுள்ளார். சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்து மக்களவை தேர்தலை எதிர்கொண்ட நிலையில், மாயாவதி திடீர் முடிவு எடுத்துள்ளார். இது நிரந்தர பிரிவல்ல என்றும் எதிர்காலத்தில் அகிலேஷ் தனது அரசியல் பயணத்தில் வென்றால் இணைவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக உத்தர பிரதேசத்தில் மக்களவை தேர்தலில் சமாஜ்வாடியுடன் அமைக்கப்பட்ட கூட்டணியை முறிக்க, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி முடிவு செய்தார். அடுத்து, 11 தொகுதிகளில் நடக்கும் இடைத்தேர்தல் தனித்து போட்டியிட அவர் திட்டமிட்டுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியும் மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில், பகுஜன் சமாஜ் 10 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சமாஜ்வாடி 5 இடங்களில் மட்டுமே வென்றது. அதிக இடங்களை பிடித்து மத்தியில் ‘கிங் மேக்கராக’ மாறலாம் என நினைத்த மாயாவதியின் கனவு, இதன் மூலம் தகர்ந்தது. இதனால், பெரும் ஏமாற்றத்தில் இருக்கிறார்.
இந்நிலையில், டெல்லியில் உத்தரப் பிரதேச மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் நிர்வாகிகளுடன் மாயாவதி நேற்று ஆலோசனை நடத்தினார்.

அதில், தேர்தல் தோல்விக்கான காரணங்கள் ஆராயப்பட்டது. கூட்டத்தில் பேசிய மாயாவதி, “எம்எல்ஏக்கள், புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்பிக்கள் மற்றும் கட்சியின் தலைவர்கள் அனைவரும், உபி.யில் நடக்க உள்ள 11 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு தயாராக வேண்டும். பகுஜன் சமாஜ் தனது சொந்த அமைப்புக்களை வலுவாக்க வேண்டும். ஓட்டுகளை வாங்கி வெற்றி பெறுவதற்காக கூட்டணி கட்சிகளை சார்ந்து இருக்கக் கூடாது” என்றார். இதன் மூலம், சமாஜ்வாடி கூட்டணியை அவர் முறிக்க முடிவு செய்துள்ளதாக கருதப்பட்டது.  சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவிடம் கேட்டபோது, மாயாவதியின் அதிகாரப்பூர்வ முடிவுக்காக காத்திருப்பதாக பதிலளித்தார்.


Tags : BSP ,Mayawati , Uttar Pradesh, 11 Lok Sabha constituencies, and Kunjan Samaj Party leader Mayawati
× RELATED பாஜவுக்கு நல்ல நாட்கள் வந்தது,...