×

செல்போன் டவர் மீது ஏறியதால் பூந்தமல்லியில் பரபரப்பு: அடுத்தவர் மனைவிக்கு ஆசைப்பட்டு தற்கொலை மிரட்டல் விடுத்தவர் கைது, பெண்ணை நேரில் காட்டி கீழே இறக்கினர்

சென்னை: முன்னாள் காதலியும், இரண்டு குழந்தைகளுக்கு தாயுமான இளம்பெண்ணை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி, செல்போன் டவர் மீது ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பூந்தமல்லி அருகே பரபரப்பை ஏற்படுத்தியது. திருவேற்காடு, நடேசன் நகரை சேர்ந்தவர் குணாளன் (32), கூலி தொழிலாளி. இவரது மனைவி லோகநாயகி (28). தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன், லோகநாயகி தனது குழந்தைகளுடன் மாயமானார்.அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குணாளன் புகார் அளித்தார்.இதுபற்றி போலீசார் விசாரித்து வந்த நிலையில், லோகநாயகி தனது 2 குழந்தைகளுடன் நேற்று முன்தினம் மாலை பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு வந்தார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ‘அதே பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் முரளி (30) என்பவரை திருமணத்துக்கு முன் காதலித்தேன். அவரை பார்ப்பதற்காக குழந்தைகளுடன் அவர் வீட்டுக்கு சென்றிருந்தேன்’ என லோகநாயகி கூறியுள்ளார். இதையடுத்து போலீசார், அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

பின்னர், முரளியை விசாரணைக்கு வருமாறு போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்தனர். அதன்பேரில் முரளி மகளிர் காவல் நிலையத்துக்கு  வந்தார். அப்போது, ‘‘அடுத்தவர் மனைவியுடன் தொடர்பில் இருப்பது தவறு. இனிமேல், அவ்வாறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என போலீசார் எச்சரித்தனர்.ஆனால், அதை ஏற்காத அவர், ‘தன்னுடன் லோகநாயகியை சேர்த்து வைக்க வேண்டும்’ எனக்கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், அங்குள்ள செல்போன் டவர் மீது ஏறி நின்று, தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அவரை கீழே இறங்கி வரும்படி போலீசார் பலமுறை வலியுறுத்தியபோது, ‘லோகநாயகி நேரில் வர வேண்டும்’ என முரளி அடம்பிடித்தார்.இதையடுத்து லோகநாயகியை போலீசார் அங்கு வரவழைத்தனர். அவரை பார்த்ததும் மனம் மாறிய முரளி செல்போன் டவரில் இருந்து கீழே இறங்கி வந்தார். இதன்பிறகு முரளியை போலீசார் கைது செய்தனர்.முன்னாள் காதலியை தன்னுடன் சேர்த்து வைக்கும்படி செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : suicide , Cellphone Tower, Poonamallee, Suicide and Bullying
× RELATED தர்மபுரி அருகே இன்ஸ்டாகிராம்...