சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: வாக்காளர் பட்டியல் தயாராகவில்லை என்ற காரணத்தைக் கூறி மீண்டும் தேர்தலை தள்ளி வைக்க வேண்டுமென கூச்சமின்றி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. கடந்த 2 1/2 ஆண்டுகளாக பல சாக்கு போக்குகளை சொல்லி தமிழக அரசு மக்களின் அடிப்படை உரிமையாக உள்ள உள்ளாட்சித் தேர்தலை தொடர்ந்து நடத்தாமல் தள்ளி வைத்துக் கொண்டுள்ளது. தமிழகத்தை ஆளும் அதிமுக தேர்தலில் மக்களை சந்திக்க திராணியற்ற நிலையில் இத்தகைய மோசடித்தனமான காரியத்தில் ஈடுபட்டு வருகிறது. ஜனநாயகத்தின் ஆணி வேராக திகழும் உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட்ட பஞ்சாயத்து ராஜ் சட்டம் இந்த அமைப்புகளுக்கு முறையாக தேர்தல் நடைபெற்றால் மட்டுமே மத்திய அரசின் நிதி தடையின்றி கிடைக்கும்.
தமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்சனை கடுமையாக உள்ளது, மேலும் கழிவுநீர் அகற்றல், மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் உள்ளன. உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் சொத்துவரி, குப்பை வரி, குடிநீர் வரி என அனைத்து வரிகளையும் பல மடங்கு உயர்த்தி அதிமுக அரசு மக்களை கொடுமை படுத்துகிறது. சமீபத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத்திற்கான தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது, இதற்கான வாக்காளர் பட்டியலை தயாரிக்கப்பட்டது. இந்நிலையில் உள்ளாட்சி மன்ற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை தயாரிக்க முடியவில்லை என்று கூறுவது அரசின் திட்டமிட்ட மோசடியை பறைசாற்றுவதாக உள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி