×

சாதி, மதச்சண்டைகள் இல்லை: தமிழகம் அமைதிப்பூங்காவாக உள்ளது: ஈரோடு பிரசாரத்தில் முதல்வர் பழனிசாமி பேச்சு

ஈரோடு: தமிழகத்தில் சாதி, மதச்சண்டைகள் இல்லை, அமைதிப்பூங்காவாக உள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி நேற்று ஈரோடு மாவட்டத்தில் 2ம் நாளாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் அவர் பேசியதாவது: வரும் தேர்தல் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சி சந்திக்கக்கூடிய முதல் சட்டமன்ற தேர்தல். ஜெயலலிதா ஆற்றிய பணி இந்த மண்ணில் இன்றும் நிலைத்து நிற்கிறது. ஏப்ரல், மே மாதத்தில் தேர்தல் வர உள்ளது. ஈரோடு மாநகரில் ஏராளமான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் 2000 மினி கிளினிக் தொடங்கி அரசு சாதனை படைத்துள்ளது. ஆதிதிராவிட சமுதாயத்தை சேர்ந்த மாணவர்கள் 10ம் வகுப்பு முதல் உயர்கல்வி வரை படிக்க ஆண்டுதோறும் ரூ.1500 கோடி கல்வி உதவித்தொகை கொடுக்கப்பட்டு வருகிறது. ரூ.62 கோடியில் ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனை அமைக்கும் பணி நடக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளதால் அதிகளவில் தொழில் முதலீடுகள் வந்துள்ளன. சாதி, மதச்சண்டைகள் கிடையாது. அமைதிப்பூங்காவாக தமிழகம் விளங்குகிறது.  தமிழகத்தில் ரூ.1 கோடியே 7 லட்சம் மகளிர் சுய உதவி குழுவினர் உள்ளனர். இவர்களுக்கு ரூ.80 ஆயிரம் கோடி கடன் வழங்கி உள்ளோம். இவ்வாறு முதல்வா் பழனிசாமி பேசினார். வில்லரசம்பட்டியில் தொழில் முனைவோர், மருத்துவர்கள், வழக்கறிஞர்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து, அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார். அப்போது தொழில்துறையினர் சார்பில் அளித்த மனுவில், பஞ்சு விலை ஒரு மாதத்தில் 10 சதவீதம் மட்டும் அதிகரித்துள்ளது. ஆனால், நூல் விலை 40 முதல் 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. நூல் விலையை மாதம் ஒரு முறை மட்டும் மாற்றி அமைக்க வேண்டும். ஈரோட்டில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என கோரியிருந்தனர். ‘அதிமுக – போலீசார் தள்ளுமுள்ளு’ஈரோடு வில்லரசம்பட்டியில் தனியார் விடுதியில் தொழில்துறையினருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்தாலோசனை கூட்டம் நடத்தினார். கட்சி நிர்வாகிகள் விடுதிக்குள் செல்ல முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதற்கு கட்சி நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது….

The post சாதி, மதச்சண்டைகள் இல்லை: தமிழகம் அமைதிப்பூங்காவாக உள்ளது: ஈரோடு பிரசாரத்தில் முதல்வர் பழனிசாமி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tamil ,Nadu ,Chief Minister ,Palaniswami ,Erode ,Edappadi Palaniswami ,Tamil Nadu ,A.D.M.K. ,CM ,
× RELATED கடந்த 3 ஆண்டுகளில் 6,115 புத்தாக்க...