×

பாஜக நாட்டு மக்களின் நம்பிக்கையை சீர்குலைத்துவிட்டது : வயநாட்டில் பிரியங்கா காந்தி தீவிர பிரச்சாரம்!

திருவனந்தபுரம் : வயநாட்டில் ராகுல் காந்தியை ஆதரித்து அவரது சகோதரி பிரியங்கா காந்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். நாட்டின் 17வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்., 11ம் தேதி 20 மாநிலங்களில் முதற்கட்டமாக தொடங்கியது. இதனை தொடர்ந்து கடந்த 18ம் தேதி தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இரண்டாம் கட்டமாக நடைபெற்றது. கேரளா உள்ளிட்ட 14 மாநிலங்களில் மூன்றாம் கட்டமாக நடைபெற உள்ளது. இதையடுத்து நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைய உள்ளது. கேரளாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கட்சி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னேற்ற கட்சிகளும் தேர்தல் களத்தில் இருப்பர்.

ஆனால் தற்போது பாஜகவும் முன்னணி கட்சியாக திகழ்கிறது. இந்நிலையில் வயநாட்டில் ராகுல் காந்தி போட்டியிடும் தொகுதியில் பிரியங்கா காந்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அனைத்து மாநிலங்களும் எங்களுக்கு ஒன்று தான் என்பதை காட்டவே வயநாட்டில் போட்டி என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை ஆதரித்து பிரியங்கா காந்தி பிரச்சாரம் செய்தார். பழங்குடி மக்களின் கலாசாரம், வயநாடு மக்களின் கலாசாரத்தை உணர்கிறேன் என்றும், தமிழகம், உ.பி., குஜராத் அனைத்தும் எனது நாடே என அவர் குறிப்பிட்டுள்ளார்.

5 ஆண்டுகளுக்கு முன்பு பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த பாஜக, நாட்டு மக்களின் நம்பிக்கையை சீர்குலைத்துவிட்டதாக குற்றம் சாட்டிய அவர், பாஜக ஆட்சியின் 5 வருடத்தில் நாடு எந்த வளர்ச்சியையும் அடையவில்லை என்பதற்கு சாட்சிகள் உள்ளதாக தெரிவித்துள்ளார். தேசத்திற்கு சேவையாற்ற வேண்டும் என்ற இந்திரா காந்தியின் நோக்கமே தனது மனதிலும், தனது சகோதரர் ராகுல்காந்தி மனதிலும் இருப்பதாகவும், இந்த நோக்கத்தை தங்களிடம் இருந்து யாரும் அகற்றிவிட முடியாது என்றும் பிரியங்கா காந்தி தெரிவித்தார். நாளை நிலம்பூர், மலப்புரம் ஆகிய 2 இடங்களில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பிரியங்கா காந்தி பேச உள்ளார். மேலும் வயநாடு தொகுதியில் 80 சதவீதம் பேர் விவசாயிகள் என்பதால் அவர்களுடன் கலந்துரையாடல் நடத்த அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : campaign ,Priyanka Gandhi , BJP, Wayanad, Priyanka Gandhi, Lok Sabha election, Congress
× RELATED குழந்தை மாதிரி மோடி அழுகிறார்: பிரியங்காகாந்தி சாடல்