மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூரில் நடந்தது. கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பேசியதாவது:இந்தியாவை ஆட்சி செய்த பிரதமர்களில் வேறுபட்டவர் மோடி. நாட்டை சீரழிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறார். அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக தற்போதைய ஆட்சி உள்ளது. அரசியலமைப்பு சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும். மோடி ஆட்சிக்கு வந்தது முதல் பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பலர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் துண்டு பிரசுரம் விநியோகம் செய்தவர்கள், மாற்று கருத்து கூறுபவர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுகின்றனர். கருத்து சுதந்திரம் மறுக்கப்படுகிறது. காந்தி சுட்டு கொல்லப்பட்டு பல ஆண்டுகளாகியும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ரத்தவெறி குறையவில்லை. ஹிட்லரின் மறுபிறவிதான் மோடி. அவர் ஒரு பாசிஸ்ட். இதற்காக வழக்கு போட்டாலும் சந்திக்க தயார்.
எடப்பாடி தினமும் சூட்கேசை நிரப்பும் பணியை செய்து வருகிறார். முதல்வராக இருந்து துணை முதல்வரான ஓபிஎஸ், இன்ஸ்பெக்டராக இருந்து ஏட்டாக மாறியவர். சொந்த கட்சியிலேயே மரியாதை இல்லாதவர். பாஜகவிடம் அடிமையாகிவிட்டார். தமிழகத்தில் வாக்காளர்களை விலை கொடுத்து வாங்கி வந்த நிலையில் ₹400 கோடி கொடுத்தால் அரசியல் கட்சியையே விலை கொடுத்து வாங்கிவிடலாம். அந்தநிலைதான் இப்போது உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி