சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்கான நாமக்கல் மக்களவை தொகுதியில் மக்கள் தேசிய கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் வேட்பாளராக ஏ.கே.பி.சின்ராஜ் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரேகட்டமாக ஏப்ரல் 18ம் தேதி மக்களவை தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், இந்திய ஜனநாயகக் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற பட்டியல் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இதையடுத்து, கூட்டணி கட்சிகள் தங்களது தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரங்களை அறிவித்து வருகின்றனர். நேற்று திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் விவரங்கள் வெளியிடப்பட்டன. இதனை தொடர்ந்து, தற்போது கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நாமக்கல் தொகுதியில், அக்கட்சியின் வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜ், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவர், கட்சியின் பொறுப்பாளர் மற்றும் தமிழ்நாடு கோழிப்பண்ணை சங்கத்தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி