பாந்த்ரா: சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயின் மகனும், சிவசேனா இளைஞரணியான யுவசேனா தலைவருமான ஆதித்ய தாக்கரே வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தலில் ஆதித்ய தாக்கரே போட்டியிட வேண்டும் என்று சிவசேனாவில் உள்ள இளம் தலைவர்கள் மட்டுமல்லாது மூத்த தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆதித்ய தாக்கரே போட்டியிடுவது கட்சிக்கு மாநில அளவில் புதிய உத்வேகத்தை அளிக்கும் என அவர்கள் கூறி வருகின்றனர். ஆனால், இதுபற்றி உத்தவ் தாக்கரே இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை.
வடமத்திய மும்பை தொகுதியில் அவர் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பா.ஜனதாவை சேர்ந்த பூனம் மகாஜன் எம்.பி.யாக இருக்கிறார்.
அதனால், அந்த தொகுதியை பா.ஜனதா விட்டுக்கொடுப்பது சந்தேகம். எனவே ஆதித்ய தாக்கரே தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தால் அவர் வடமேற்கு மும்பை தொகுதியில் களம் காண்பார் எனக் கூறப்படுகிறது.
மறைந்த பால் தாக்கரே கடந்த 1968ம் ஆண்டு சிவசேனாவை தொடங்கியது முதல் அவரோ அல்லது அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ எந்த தேர்தலிலும் போட்டியிட்டதில்லை. தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற கொள்கையில் பால் தாக்கரே தனது இறுதி மூச்சுவரை உறுதியாக இருந்தார். சிவசேனாவை தொடங்கிய போது, தான் ஒருபோதும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என பால் தாக்கரே வாக்குறுதி அளித்திருந்தார். அதை அவர் நிறைவேற்றினார். அவரது மறைவுக்கு பின்னர் அவரது மகன் உத்தவ் தாக்கரே கட்சித் தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்ட போதிலும் அவரும் இதுவரை தேர்தலில் போட்டியிட்டதில்லை.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி